அரசு சித்த மருத்துவ கல்லூரியில் இயக்குனர் ஆய்வு

நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் மருத்துவ இயக்குனர் கணேஷ் ஆய்வு செய்தார்.
அரசு சித்த மருத்துவ கல்லூரியில் இயக்குனர் ஆய்வு
Published on

நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் மருத்துவ இயக்குனர் கணேஷ் ஆய்வு செய்தார்.

மருத்துவ இயக்குனர்

நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறை இயக்குனர் கணேஷ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர், அங்கு பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.

தொடர்ந்து மருத்துவத்துறை இயக்குனர் கணேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதிய கட்டிடங்கள்

பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரியில் பழமையான கட்டிடங்களை இடித்து புதிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 'ஜி பிளஸ் 5' என்ற புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது.

புதிய கட்டடங்களை கட்டுவது, பேராசிரியர்களுக்கான கட்டிடங்கள், உள்நோயாளிகள், வெளிநோயாளிகளுக்கான கட்டிடங்கள் கட்டுவதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது 4.5 ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால் விதிகள்படி 5 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது.

மாணவர் சேர்க்கை

புதிய கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையின்போது கூடுதலாக 60 இடங்களை கூட்டுவதற்கு கோரிக்கை பரிசீலனையில் உள்ளது. விரைவில் அதுகுறித்து தமிழ்நாடு அரசு முடிவு எடுக்கும்.

மேலும் சித்த மருத்துவம் தொடர்பான புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ரூ.10 கோடியில் சென்னை அண்ணா மருத்துவமனையில் வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிநவீன சித்த மருத்துவத்தை நெல்லையில் உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

குற்றாலத்தில் மூலிகை பண்ணை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் புதிய மூலிகை பண்ணை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் பாபநாசம் பகுதியிலும் மூலிகைப் பண்ணை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவர் அவர் கூறினார்.

சித்த மருத்துவமனை டீன் சாந்த மரியாள் மற்றும் பேராசிரியர்கள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com