டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழகம் முழுவதும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

டாஸ்மாக்கில் நீண்ட காலமாக இயங்கி வரும் அதிகாரப்பூர்வமற்ற பண வசூல் அமைப்புகளை கலைத்துவிட உத்தரவிடப்பட்டிருந்தது.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழகம் முழுவதும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் தற்போது 4,048 பதிவு செய்யப்பட்ட டாஸ்மாக் விற்பனை நிலையங்கள் உள்ளன. அதில் ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.102 கோடி அளவுக்கு முறைசாரா வழிகள் மூலம் டாஸ்மாக் வருவாய் கட்சி நிதி என்ற பெயரில் திசை திருப்பப்பட்டு வந்ததுடன், கடந்த ஐந்து ஆண்டுகளில் இதன் மூலம் மாநில அரசுக்கு ஏற்பட்ட இழப்புகள் ரூ.3,600 கோடியை தொட்டிருக்கும் என மதிப்பிடப்பட்டது.

வருவாயில் வெளிப்படைத்தன்மை

இது குறித்து மூத்த அரசு அதிகாரிகள் தமிழக முதல்-அமைச்சர் விஜய்யிடம் கூறியதையடுத்து, புதிய அரசு டாஸ்மாக் வருவாயில் வெளிப்படைத்தன்மையுடைய செயல்பாட்டை தொடங்க உத்தரவிட்டது. மேலும், காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் முறையை மறுஆய்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

717 மதுபான விற்பனை நிலையங்கள்

இதனிடையே தமிழக அரசின் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், பள்ளி, கல்லூரிகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இயங்கி வந்த 717 மதுபான விற்பனை நிலையங்களை தமிழக அரசு மூடியிருக்கிறது. டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் வரும் ஒவ்வொரு ரூபாய் வருவாயும் முறையாக அரசின் கருவூலத்துக்கு வந்து சேருவதை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதிகாரப்பூர்வமற்ற பண வசூல் அமைப்புகள்

தமிழ்நாட்டில் இயங்கும் டாஸ்மாக்கின் மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் முழுவதும் நீண்ட காலமாக இயங்கி வரும் அதிகாரப்பூர்வமற்ற பண வசூல் அமைப்புகளை கலைத்துவிடவும் அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

41 இடங்களில் சோதனை

இந்நிலையில் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதன்படி ஈரோடு, கோவை (பீளமேடு), பொள்ளாச்சி, நரசிம்மநாயக்கன் பாளையம், நவகரையில் உள்ள கிடங்குகளில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேட்டுப்பாளையம் நரசிம்ம நாயக்கன்பாளையத்தில் சிவாஸ் மதுபான தயாரிப்பு ஆலை மற்றும் மன்னார்குடியில் உள்ள டி.ஆர்.பாலுவுக்கு சொந்தமான மதுபான ஆலையிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் தொண்டி சாலையில் உள்ள டாஸ்மாக் குடோனில், ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் கணக்கில் வராத லட்சக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com