காயிதே மில்லத் குறித்து பாடப்புத்தகத்தை திருத்த கோரிய வழக்கு தள்ளுபடி

காயிதே மில்லத் குறித்து பாடப்புத்தகத்தை திருத்த கோரிய வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு.
காயிதே மில்லத் குறித்து பாடப்புத்தகத்தை திருத்த கோரிய வழக்கு தள்ளுபடி
Published on

சென்னை,

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த வெங்கடேசன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், "7-ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் கண்ணியமிகு தலைவர் என்ற தலைப்பில் காயிதே மில்லத் பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளது. அதில், சுதந்திரத்துக்கு பிறகு ஆட்சி மொழியை தேர்வு செய்வதற்கான அரசியல் நிர்ணய சபைக்கூட்டத்தில், பழமையான தமிழ்மொழியை நாட்டின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என காயிதே மில்லத் பேசியதாக தவறான தகவல் இடம்பெற்றுள்ளது. அந்த கூட்டத்தில் தமிழ் பழமையான மொழியாக இருந்தாலும், அதிக மக்கள் பேசும் மொழியாக இல்லாததால் அதை நாட்டின் அலுவல் மொழியாக அறிவிக்க வற்புறுத்தவில்லை. இந்துஸ்தானி, தேவநகரி அல்லது உருது மொழியை தேசிய அலுவல் மொழியாக அறிவிக்கலாம் என்று காயிதே மில்லத் பேசியிருப்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. எனவே வரலாற்று உண்மைகளை அரசியல் காரணங்களுக்காக மாற்றக்கூடாது. இந்த தவறுகளை நீக்கி அந்த பாடத்தில் திருத்தம் செய்ய பள்ளிக்கல்வித்துறை செயலர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர், மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com