

சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் கற்பகம் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழக அரசுப்பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த 2020-21-ம் கல்வியாண்டில் 5 லட்சத்து 32 ஆயிரம் லேப்டாப்கள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. ஆனால், மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு இலவச லேப்டாப்கள் வழங்கப்படவில்லை. எனவே மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கும் இலவச லேப்டாப்களை வழங்க உத்தரவிட வேண்டும், என அதில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, "மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு இலவச லேப்டாப் வழங்கப்படவில்லை என்பதற்கான ஆதாரங்கள் ஏதும் தாக்கல் செய்யப்படவில்லை. ஐகோர்ட்டு நேரத்தை வீணடிக்கும் வகையில் இந்த வழக்கு தொடரப்பட்டு உள்ளது. எனவே அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்போகிறோம்" என்று நீதிபதிகள் கூறினர்.
இதையடுத்து வழக்கை திரும்ப பெறுவதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இதை ஏற்றுக் கொண்டு, வழக்கை திரும்ப பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.