எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் மதிப்பெண் கணக்கிட்டதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி - ஐகோர்ட்டு உத்தரவு

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் மதிப்பெண் கணக்கிட்டதை எதிர்த்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் மதிப்பெண் கணக்கிட்டதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி - ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

கொரோனா வைரஸ்பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும், வருகைப்பதிவு அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்பட்டன.

இந்த நடைமுறையை ரத்து செய்யகோரி, முகமது ஹூமாயூன் உள்பட 8 மாணவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில், புதிய பாடத்திட்டத்தின் கீழ் படித்த தங்களால், அரையாண்டு தேர்வுக்கு பிறகே அதை புரிந்து கொள்ள முடிந்தது. எனவே, மார்ச் மாதத்துக்கு முன் நடத்திய திருப்புதல் (ரிவிசன்) தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் கணக்கிட உத்தரவிட வேண்டும் என்று வாதிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு தரப்பு வக்கீல், ஏற்கனவே எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு, மதிப்பெண்கள் கணக்கிட்டு, மதிப்பெண் பட்டியலும் வெளியிடப்பட்டு விட்டது என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, கொரோனா வைரஸ் தொற்றுக்காலத்தில் மாணவர்கள் நலன் கருதி, பொது தேர்வு குறித்து அரசு எடுத்துள்ள கொள்கை முடிவில் தலையிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com