

சென்னை,
கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளராக இருந்து வந்தவர் புகழேந்தி. ஜெயலலிதா மறைவுக்கு பின்பு டி.டி.வி.தினகரன் அணியில் இருந்தார். அதையடுத்து அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.
அதன்பின்பு, டி.டி.வி.தினகரன் தொடங்கிய அ.ம.மு.க. கட்சியில் பொறுப்பு வகித்துவந்த அவர், அக்கட்சியில் இருந்து விலகி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மீண்டும் அ.தி. மு.க.வில் ஐக்கியமானார்.
அதைத்தொடர்ந்து அ.தி. மு.க.வில் அவருக்கு செய்தித்தொடர்பாளர், ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் பதவிகள் வழங்கப்பட்டன. இந்தநிலையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்தது குறித்து புகழேந்தி சில கருத்துகளை தெரிவித்தார்.
இதன்காரணமாக கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டு கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும்வகையில் நடந்துகொண்டதாக கூறி அவரை கட்சியில் இருந்து நீக்கி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் 14.6.2021 அன்று உத்தரவிட்டனர்.
இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மீது சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல். ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் புகழேந்தி அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
என்னை கட்சியில் இருந்து நீக்குவதற்கு முன்பு எந்த விளக்கமும் கேட்கவில்லை. என்னை கட்சியில் இருந்து நீக்கியதற்கு எந்த முறையான காரணமும் தெரிவிக்கப்படவில்லை.
என்னுடன் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்று அறிவித்து இருப்பதன் மூலம் எனது நற்பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் செயல்பட்டுள்ளனர். எனவே, அவர்கள் இருவரையும் அவதூறு சட்டப்பிரிவின்கீழ் தண்டிக்க வேண்டும். இவ்வாறு அதில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆலிசியா, இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் 24-ந்தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.