

தூத்துக்குடி,
தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா வருகிற 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஆலயம் அருகே உள்ள மைதானத்தில் பொருட்காட்சிக்கான பணிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு பொருட்காட்சி அமைக்கும் பணிகள் நடந்து கொண்டு இருந்தன. அப்போது, அங்கு வந்த த.வெ.க.வை சேர்ந்த திவாகர் உள்ளிட்ட 10 பேர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அங்கு இருந்த நாற்காலி, டியூப் லைட் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினார்களாம். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து பொருட்காட்சி ஏற்பாட்டாளர் டென்சிங் கொடுத்த புகாரின் பேரில் த.வெ.க.வை சேர்ந்த திவாகர் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.