வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸால் தகராறு: காதல் மனைவியை தாக்கிய ஐ.டி. ஊழியர் கைது

மருமகள், மாமியாரை வேலை செய்ய சொல்வது போன்று ரீல்ஸ் இருந்தது.
வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸால் தகராறு: காதல் மனைவியை தாக்கிய ஐ.டி. ஊழியர் கைது
Published on

சேலம்,

மாமியார் வேலை பார்ப்பது போன்ற வீடியோவை வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் வைத்ததால் ஏற்பட்ட தகராறில், காதல் மனைவியை தாக்கிய சென்னை ஐ.டி. ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (வயது 24). இவர், சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அபிராமி என்பவரை காதலித்து பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு புதுமண தம்பதி சென்னையில் வாடகை வீட்டில் குடியேறி குடும்பம் நடத்தி வந்தனர்.

வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்

இந்நிலையில், சமூக வலைதளங்களில் வந்த மாமியார், மருமகள் ரீல்ஸ் வீடியோவை அபிராமி தனது செல்போனில் வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்

வைத்துள்ளார். அந்த வீடியோவில், மருமகள், மாமியாரை வேலை செய்ய சொல்வது போன்று இருந்தது. இதனை ஸ்ரீகாந்தின் தங்கை பார்த்துவிட்டு, நமது தாயாரை பற்றி உனது மனைவி ரீல்ஸ் வைத்துள்ளார் என கூறியுள்ளார்.

மனைவியுடன் தகராறு

இதனால் ஆவேசம் அடைந்த ஸ்ரீகாந்த், மனைவியிடம் ஏன் எனது தாயாரை பற்றி ரீல்ஸ் வீடியோவை ஸ்டேட்டஸ் வைத்துள்ளாய்? என கேட்டு கண்டித்தார். அதற்கு அபிராமி, இதனை காமெடி வீடியோவாக எடுத்துக்கொள்ள வேண்டியது தானே? என கணவரிடம் தெரிவித்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அபிராமி கணவரிடம் கோபித்துக்கொண்டு சேலத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். அதன்பிறகு ஸ்ரீகாந்தும் சேலத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார்.

கணவர் கைது

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலத்தில் மாமியாரின் வீட்டிற்கு ஸ்ரீகாந்த் சென்றபோது, அங்கிருந்த அபிராமியுடன் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, மனைவியை அவர் அடித்து தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அபிராமி, ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று ஸ்ரீகாந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு ஸ்டேட்டஸ் வைத்த விவகாரத்தால் காதல் திருமணம் செய்த மனைவியை தாக்கிய கணவர் இன்றைக்கு சிறைக்கு செல்லும் நிலைக்கு வந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com