4-வது நாளாக தொடரும் குளறுபடி: இண்டிகோ விமானங்கள் ரத்தால் பரிதவிக்கும் பயணிகள்

சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் 550-க்கும் மேற்பட்ட விமானங்களை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மும்பை,

நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ நேற்று 3-வது நாளாக திட்டமிட்டபடி விமானங்களை இயக்குவதில் சிக்கல்களை எதிர்கொண்டது. மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் 550-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களை ரத்து செய்தது. இதில் டெல்லி விமான நிலையத்தில் 172 விமானங்களும் அடங்கும்.

மும்பை விமான நிலையத்தில் குறைந்தது 118 விமானங்களும், பெங்களூருவில் 100 விமானங்களும், ஐதராபாத்தில் 75 விமானங்களும், கொல்கத்தாவில் 35 விமானங்களும், சென்னையில் 26 விமானங்களும், கோவாவில் 11 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. தேவையான விமான பணியாளர்களை அமர்த்துவதில் ஏற்பட்ட சிக்கல் மற்றும் விமான போக்குவரத்து அட்டவணைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் அந்த விமான நிறுவனத்தின் செயல்பாடுகளை பாதித்தது.

இதன் காரணமாக நேற்று 3-வது நாளாக பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். விமான நிலையங்களுக்கு வந்து நீண்டநேரம் காத்திருந்த பயணிகள், விமான நிறுவன ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவங்களை அடுத்து விமான ரத்து மற்றும் தாமதங்களை குறைக்க உரிய செயல்திட்டத்தை சமர்ப்பிக்குமாறு இண்டிகோ நிறுவனத்துக்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் கேட்டுக்கொண்டு உள்ளது.

இதுகுறித்து இந்திய விமானிகள் கூட்டமைப்பு இண்டிகோ விமான நிறுவன நிர்வாகத்தை குறை கூறியுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்ட சம்பவத்திற்கு விமானிகளின் பணிநேர கட்டுப்பாடுகள் காரணம் இல்லை என்று திட்டவட்டமாக தெளிவுபடுத்த விரும்புகிறோம். மற்ற அனைத்து விமான நிறுவனங்களும் போதுமான அளவுக்கு விமானிகளை வழங்கியுள்ளன.

மேலும் சரியான திட்டமிடல் மற்றும் முன் தயாரிப்பு காரணமாக அந்த நிறுவனங்கள் பாதிக்கப்படவில்லை. தற்போதைய போக்குவரத்து இடையூறு போதிய ஆட்களை நியமிக்காத இண்டிகோ நிறுவன செயல்பாட்டின் விளைவாகும். முழுமையான பணியாளர் பணிநேர கட்டுப்பாடுகளை செயல்படுத்த 2 ஆண்டுகள் கால அவகாசம் இருந்தபோதிலும், விமான நிறுவனம் போதுமான பணியாளர்களை பணி நியமனம் செய்ய தவறிவிட்டது என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாடு முழுவதும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை 4-ம் நாளாக கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், ஒரு இண்டிகோ பயணியை கூட சென்னை விமான நிலையத்திற்குள் அனுமதிக்க வேண்டாம் என இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் சென்னை விமான நிலைய CISF-க்கு கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த சூழலில் இந்தியா முழுவதும் சுமார் 400 இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னை விமான நிலையத்தில் மட்டும் 62 இண்டிகோ விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விமானங்களை இயக்குவதற்கு, விமானிகள், விமான பணியாளர்கள் இல்லாத காரணத்தால் ரத்து என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானங்கள் ரத்து பற்றி எந்த தகவலும் தெரியாமல் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். கோவையில் இருந்து சென்னை, ஐதராபாத், டெல்லிக்கு செல்லும் இண்டிகோ விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. கோவாவிலும் இண்டிகோ விமானங்கள் ரத்தானதால் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com