ஸ்கேன் பரிசோதனை கட்டணத்தை குறைக்கவேண்டும்.. திவ்யா சத்யராஜின் மகிழ்மதி இயக்கம் கோரிக்கை

மகிழ்மதி இயக்கம், நோயாளிகளுக்கு ஆதரவு சேவைகளை வழங்கி வருவதாக திவ்யா சத்யராஜ் தெரிவித்தார்.
Published on

சென்னை:

நடிகர் சத்யராஜின் மகளும், பிரபல ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் கூறியிருப்பதாவது:-

ஒரு ஆண்டின் மருத்துவச் செலவுகள் 63 மில்லியன் இந்தியர்களை வறுமையில் தள்ளுகின்றன. எம்.ஆர்.ஐ., சி.டி., அல்ட்ராசவுண்ட் போன்ற கண்டறியும் இமேஜிங் சேவைகளுக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிக்கின்றன. விலைகள் சாமானியர்களுக்கு எட்டவில்லை.

நான் மகிழ்மதி இயக்கம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினேன். குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு சத்தான உணவை இலவசமாக வழங்குகிறோம். மேலும், நாங்கள் நோயாளிகளுக்கு ஆதரவு சேவைகளையும் வழங்குகிறோம்.

இந்நிலையில், எம்.ஆர்.ஐ மற்றும் இமேஜிங் சேவைகளின் விலையைக் குறைக்கும்படி ஒரு தனியார் மருத்துவமனையைக் கோரியபோது, "எங்களிடம் சிறந்த இயந்திரங்கள் உள்ளன, ஏழைகள் அரசு மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டும், இயந்திரங்களைப் பராமரிக்க எங்களுக்கு பணம் தேவை" என்பது போன்ற விளக்கங்களை நிர்வாகம் எங்களுக்கு வழங்கியது.

எனவே, தனியார் மருத்துவமனைகள் எம்.ஆர்.ஐ. மற்றும் பிற இமேஜிங் சேவைகளின் விலையில் 30 சதவீதம் குறைக்கக்கோரி எனது தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தன்னார்வ தொண்டர்களுடன் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு திவ்யா சத்யராஜ் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com