தீபாவளி பண்டிகை: ஆவின் இனிப்பு விற்பனையை 20 சதவீதம் அதிகப்படுத்த வேண்டும் - அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவுறுத்தல்

தீபாவளி பண்டிகையையொட்டி ஆவின் இனிப்பு விற்பனையை கடந்த ஆண்டைவிட 20 சதவீதம் அதிகப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளார்.
தீபாவளி பண்டிகை: ஆவின் இனிப்பு விற்பனையை 20 சதவீதம் அதிகப்படுத்த வேண்டும் - அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவுறுத்தல்
Published on

சென்னை,

சென்னை நந்தனம் ஆவின் இல்லத்தில் பால்வளத்துறை மற்றும் கதர்த்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் அனைத்து மாவட்ட ஆவின் பொது மேலாளர்கள், துணை பதிவாளர்கள் ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

பால் கொள்முதலை அதிகரிக்கும் வகையில் சங்கங்கள் இல்லாத கிராமங்களில் புதிய சங்கங்களை உருவாக்குதல், புதிய உறுப்பினர்களை சேர்த்தல், பாலின் தரத்தை உறுதி செய்தல், சங்க உறுப்பினர்களுக்கு கறவை மாடுகள் வாங்குவதற்கான கடன் வழங்குதல், தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களின் நிதி நிலைமையை வலுவாக்குதல், சங்க உறுப்பினர்களுக்கு 10 நாட்களுக்குள் பால் பணம் பட்டுவாடா நிலுவையின்றி செலுத்துதல், கால்நடைகளுக்கு தங்கு தடையின்றி தீவனம் மற்றும் தாது உப்பு கிடைப்பதை உறுதி செய்தல் உள்பட அறிவுறுத்தல்களை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.

ஆவின் நிறுவனம் தினமும் சராசரியாக 14.50 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்து வரும் நிலையில் சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்த சமயத்தில் கடந்த 15-ந்தேதி அன்று 16 லட்சம் லிட்டரும், 16-ந்தேதி அன்று 16.50 லட்சம் லிட்டரும் பால் விற்பனை செய்யப்பட்டதற்கு பாராட்டுகளை தெரிவித்தார். தீபாவளி பண்டிகையையொட்டி ஆவின் இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனையை கடந்த ஆண்டைவிட 20 சதவீதம் அதிகப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com