தீபாவளி பண்டிகை: திருப்பூரில் உள்நாட்டு ஆடை தயாரிப்பு தீவிரம்

ஜவுளி சந்தைகளில் திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகள் அதிகம் விற்பனை செய்யப்படுகிறது.
திருப்பூர்,
திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் அளவுக்கு உள்நாட்டு ஆடை உற்பத்தி சிறந்து விளங்குகிறது. தீபாவளி பண்டிகைக்கான ஆர்டர் உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வடமாநில வர்த்தகர்களின் ஆர்டரின் பேரில், ஆயத்த ஆடை மற்றும் உள்ளாடை தயாரிப்பு திருப்பூரில் தீவிரமாக நடந்து வருகிறது. கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மும்பை, டில்லி வரை முன்னணி உள்நாட்டு ஜவுளி சந்தைகளில் திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகள் அதிகம் விற்பனை செய்யப்படுகிறது.
ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர், குழந்தைகளுக்கான ஆடைகள், உள்ளாடைகள், புதிய டிசைன்களில் ஆண்டுதோறும் அறிமுகம் செய்யப்படுகின்றன. திருப்பூரை பொறுத்தவரை தீபாவளி ஆர்டர் என்பது மிக முக்கியம். உள்நாட்டு ஆடை வர்த்தகத்தில் ஆண்டு முழுவதும் நடக்கும் ரூ.30 ஆயிரம் கோடியில், ரூ.12 ஆயிரம் கோடி வரையிலான வர்த்தகம், தீபாவளி பண்டிகைகால ஆர்டர்களாக இருக்கிறது.
தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக, நவராத்திரி விழாவும் கொண்டாடப்படுகிறது. சில மாநிலங்களில், நவராத்திரி விழாவுக்கு புத்தாடை அணியும் பாரம்பரியமும் இருக்கிறது. ஆடை கொள்முதல் ஆண்டு முழுவதும் நடந்தாலும், உள்ளாடை கொள்முதல் தீபாவளி பண்டிகையை சார்ந்து மொத்தமாக நடக்கிறது.
திருப்பூரில் உற்பத்தியாகும் பருத்தி நூலிழை பின்னல் பனியன், ஜட்டிகள், பாக்கெட் டிராயருக்கு வடமாநிலங்களில் அதிக வரவேற்பு உள்ளது. அதுபோல் குளிர்காலங்களில் பயன்படுத்துவதற்கு செயற்கை நூலிழையில் உற்பத்தியாகும் உள்ளாடைகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ஆடை உற்பத்தியாளர்கள் கூறும்போது, 'தீபாவளி பண்டிகை கால ஆர்டர் விசாரணை, இந்த மாத தொடக்கத்தில் அதிகரித்தது. கடந்த ஆண்டு போலவே, அதிக ஆர்டர் கிடைத்து வருகிறது. சிறிய ஆர்டராக இருந்தாலும், வேகமாக உற்பத்தி செய்து அனுப்பி வருகிறோம். உள்ளாடைகளை பொறுத்தவரை, முன்கூட்டியே தயாரித்து இருப்பு வைத்திருக்கிறோம்.
பின்னலாடை தயாரானதும், அவற்றுடன் சேர்த்து, கண்டெய்னர் லாரி மற்றும் ரெயில் மூலமாக அனுப்பி வைக்கப்படும். பெரியவர்களுக்கு டி-சர்ட், பெண்களுக்கு இரவு நேர ஆடை ரகங்கள், குழந்தைகளுக்கு அனைத்துவகை ஆடைகளும் ஆர்டரின் பேரில் உற்பத்தி செய்து வருகிறோம். டி-சர்ட் ஆர்டர் மீது விசாரணை அதிகம் உள்ளது.
செயற்கை நூலிழையில் தயாரிக்கப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கான டி-சர்ட் மற்றும் பேன்ட், ஷார்ட்ஸ் போன்ற ஆர்டரும் கிடைத்துள்ளது. நவராத்திரி விடுமுறையை கணக்கிட்டு, உற்பத்தியை முன்கூட்டியே வேகப்படுத்தி உள்ளோம்' என்றனர்.






