குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தி.மு.க. தொண்டர்கள் பெறும் கையெழுத்து உறுதிமிக்க தூணாக நிற்கும் - மு.க.ஸ்டாலின் அறிக்கை

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தி.மு.க. தொண்டர்கள் பெறும் கையெழுத்து உறுதிமிக்க தூணாக நிற்கும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தி.மு.க. தொண்டர்கள் பெறும் கையெழுத்து உறுதிமிக்க தூணாக நிற்கும் - மு.க.ஸ்டாலின் அறிக்கை
Published on

சென்னை,

குடியுரிமைத் திருத்த சட்டத்தை திரும்பப் பெறவும், தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு வழிகோலும் தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிப்பதை நிறுத்தக் கோரியும் 24-1-2020 அன்று எனது தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில், தமிழகம் முழுவதும் பிப்ரவரி 2 முதல் 8-ந் தேதி வரை மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டு அதன் அடிப்படையில், நான் முதன் முதலில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் இந்த கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கிவைத்தேன்.

என்னுடைய சட்டமன்ற தொகுதியில் நானே சென்று மக்களைச் சந்தித்து அவர்களிடம் இந்த கையெழுத்து இயக்கம் பற்றி எடுத்துச் சொல்லி கையெழுத்து பெற்றேன். அதைப் போலவே அனைத்துக் கட்சி தலைவர்களும் ஆங்காங்கே தொடங்கிவைத்து தமிழகம் முழுவதும் இந்த கையெழுத்து இயக்கம் தீவிரமாக நடைபெறுகிறது.

இன்று (அதாவது நேற்று) வழக்கம் போல் காலையில் முரசொலி அலுவலகம் செல்லும் வழியில், தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலை பகுதியில், கட்சி தொண்டர்கள் கையெழுத்து இயக்கம் நடத்திக்கொண்டிருந்ததைப் பார்த்த நான் காரில் இருந்து இறங்கிச்சென்று, தொண்டர்களோடு நானும் ஒரு தொண்டன் என்ற முறையில் இணைந்து கலந்துகொண்டு கையெழுத்துக்களைப் பெற்றேன்.

அப்போது ஏன் இந்த கையெழுத்து என்பதை மக்களிடம் விளக்கி கையெழுத்துப்போட இயலாதவர்களிடம் கைரேகை இடுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து இந்த கையெழுத்து இயக்கம், மகத்தான மக்கள் இயக்கமாக நடைபெற வேண்டும் என்ற ஆர்வத்தை தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் ஏற்படுத்திவிட்டு, அங்கிருந்து நான் முரசொலி அலுவலகத்திற்கு புறப்பட்டுச்சென்றேன்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களை கிராமம், கிராமமாக திண்ணைப் பிரசாரம் போலவும், நகர்ப்புறம் என்றால் வீதி, வீதியாகவும் சந்தித்து, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு வாக்களித்த அ.தி.மு.க.வின் துரோகத்தையும், இந்த சட்டத்தை கொண்டுவந்து சமூக நல்லிணக்கத்துடன் வாழும் அனைத்து சமுதாய மக்களையும் பிளவுபடுத்தும் மத்திய பா.ஜ.க. அரசின் வஞ்சகத்தையும் விளக்கிட வேண்டும். தி.மு.க. சார்பில் கொடுக்கப்பட்டுள்ள துண்டு பிரசுரங்களை வழங்கிட வேண்டும்.

ஏதோ கையெழுத்து பெறுகிறோம் என்று இந்த இயக்கத்தை எந்திர கதியில் நடத்தாமல் ஒவ்வொரு கையெழுத்தைப் போடுவோரும் பா.ஜ.க. - அ.தி.மு.க.வின் துரோகத்தைப் புரிந்துகொள்ளும் நிலையை உருவாக்கி இந்த பிரசாரம் பட்டிதொட்டிகளுக்கும் செல்லும் வகையில், இந்த கையெழுத்து இயக்கம், உணர்வுப்பூர்வமாகவும், அறிவுப்பூர்வமாகவும், மக்களின் பேரியக்கமாக பெருக்கெடுத்து நடைபெற்றிட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

கையெழுத்து இயக்கங்கள் சரித்திரத்தை மாற்றியதற்கு, பல உதாரணங்கள் உண்டு. ஆகவே பா.ஜ.க. - அ.தி.மு.க.வின் துரோகத்தை தமிழக மக்களுக்கு உணரவைத்து இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறவும், தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு வழிகோலும் தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிப்பதை நிறுத்தி வைக்கவும் தி.மு.க. தொண்டர்கள் பெறும் ஒவ்வொரு கையெழுத்தும் உறுதிமிக்க ஒரு தூணாக நிற்கும்.

அந்த வகையில் தொடர்ந்து பிப்ரவரி 8-ந் தேதி வரை கையெழுத்து இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தி பிப்ரவரி 9 அல்லது 10-ந் தேதிக்குள் அனைத்து கையெழுத்து படிவங்களையும் தி.மு.க. தலைமைக்கு அனுப்பிட வேண்டும். அந்த ஒரு கோடி கையெழுத்துகளையும் எடுத்துக்கொண்டு டெல்லி சென்று தி.மு.க. தலைமையிலான அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஜனாதிபதியை சந்தித்து, இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்துவார்கள்.

ஆகவே பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி கைகோர்த்து தமிழக மக்களுக்கு செய்துள்ள மன்னிக்க முடியாத இந்த பச்சைத் துரோகத்தை, மக்கள் மன்றத்திற்கு கொண்டு சென்று விளக்கிடும் இந்த மாபெரும் கையெழுத்து இயக்கம் மக்கள் கடலை தன்பால் ஈர்த்த தனிப்பெரும் இயக்கம் என்ற பெயரினைப் பெற்றிடும் வகையில், தி.மு.க. தொண்டர்கள் தொடர்ந்து உழைத்திட வேண்டும்.

கடந்த இரு நாட்களாக இருந்த சுறுசுறுப்பைக் காட்டிலும், அதிக ஆர்வத்துடன் நடத்தி, ஆணவ பா.ஜ.க. ஆட்சி மற்றும் மாநிலத்தில் உள்ள அராஜக அ.தி.மு.க. ஆட்சி ஆகியவற்றின் முகமூடியை மக்கள் மத்தியில் கிழித்தெறியும் வகையில் தி.மு.க. தொண்டர்கள் முனைப்புடன் முழுவீச்சில் பணியாற்றிட வேண் டும் என்றும், ஒரு கோடி கையெழுத்து என்ன அதற்கு மேலும் பெற்றுவிட்டோம் என்ற வெற்றிச் செய்தியுடன் கையெழுத்து படிவங்கள் அண்ணா அறிவாலயத்திற்கு அலைகளைப்போல வந்து மலைபோலக் குவிந்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com