

சென்னை,
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தி.மு.க. கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் வரை ஒதுக்க தி.மு.க. விருப்பம் தெரிவித்திருந்தது.
அதே சமயம், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில், கடந்த தேர்தலில் ஒதுக்கிய 6 தொகுதிகளை ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பாக ஏற்கனவே 3 கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட நிலையில், இன்று 4-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் தி.மு.க.-இந்திய கம்யூனிஸ்ட் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டது. இதன்படி தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் கையெழுத்திட்டனர். தி.மு.க. கூட்டணியில் இதுவரை காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், ம.தி.மு.க.வுக்கு 4 தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள், கொ.ம.தே.க.வுக்கு 2 தொகுதிகள், ம.ம.க.வுக்கு 2 தொகுதிகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.