கமல்ஹாசனுக்கு தி.மு.க. கூட்டணி ஆதரவு தரவேண்டும்: மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்படும் என தி.மு.க.வுடன் முடிவு செய்யப்பட்டது.
சென்னை,
கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு, செயற்குழு கூட்டம் இன்று கூடியது. இதில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் 1
2024-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற பொது தேர்தலின்போது திராவிட முன்னேற்ற கழகத்துடன் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2025-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில், வருகிற ஜூன் 19-ந்தேதி நடைபெற இருக்கும் 6 தமிழக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக, தலைவர் கமல்ஹாசன் அவர்களை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு, செயற்குழு ஏகமனதாக முடிவு செய்து அறிவிக்கிறது.
தீர்மானம் 2
மாநிலங்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரான கமல்ஹாசன் அவர்களுக்கு தங்களது மேலான ஆதரவை நல்கும்படி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணி கட்சிகளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு, செயற்குழு கேட்டுக்கொள்கிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.






