

சென்னை,
தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
சென்னை, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையான 'மக்கள் மாளிகை'யில், நேற்று திருவள்ளுவர் திருநாள் விழா நடைபெற்றது. 'திருவள்ளுவர் திருநாட் கழகம்' என்ற அமைப்பு நடத்திய இந்த விழாவில், காவி உடையுடன் திருவள்ளுவர் படம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அப்படத்திற்கு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதற்கு வழக்கம்போல, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். திமுக, மதிமுக போன்ற கட்சிகளுக்கு, காவி நிறமும் ஆகாது. இந்து மத சின்னங்கள் எதுவும் ஆகாது. அவர்களின் இந்து மத வெறுப்பு எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனால், தமிழ்நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டோம் என்று ஆட்சிக்கு வந்துள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர், திமுக ஆட்சியை அப்படியே தொடர்ந்து வருகின்றனரோ என்ற சந்தேகம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் நடந்த அத்தனை சட்டம் ஒழுங்கு சீரழிவுகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் வழக்கம் போல தொடர்கின்றன. முன்பு திமுக அமைச்சர்கள், இந்து மதத்திற்கு எதிராக வெறுப்பை உமிழ்வார்கள்.
இப்போது தவெக அமைச்சர்களும் அதையே செய்கிறார்கள். தவெக ஆட்சி என்பது தமிழ்நாட்டின் தொடக்கமல்ல; திமுகவின் தொடர்ச்சி என்பதை கடந்த மூன்று வாரங்களாக நடக்கும் சம்பவங்கள் உணர்த்துகின்றன."திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது, அவரது தத்துவத்திற்கு எதிரானது" என்று அமைச்சர் அருண்ராஜ் கூறியிருக்கிறார். திருக்குறளில் பிறவி, ஊழ், தவம், அறம் போன்ற இந்துமத கருத்துக்கள் எங்கும் நிறைந்திருக்கின்றன."ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவர்க்கு எழுமையும் ஏமாப்புடைத்து!"ஒரு பிறவியில் கற்ற கல்வி, மனிதனுக்கு ஏழு பிறவியிலும் துணை நிற்கும் என்று திருவள்ளுவர் கூறியது இந்துமத கோட்பாடு இல்லையா?"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்"இதுபோல இந்து மத கருத்துக்களைச் சொல்லும் குறட்பாக்கள் ஏராளம் உள்ளன.
ஆனால், திமுகவின் இந்து மத வெறுப்பை தன் கொள்கையாக கொண்டுள்ள தவெகவினருக்கு என்ன சொன்னாலும் புரியப்போவதில்லை.காவி உடையுடன், இந்துமத அடையாளங்களுடன் இருந்த திருவள்ளுவரை வெள்ளை உடைக்கு மாற்றியதே முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதி தான். முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை, அவரது கட்சியினர், எம்ஜிஆர் என்று கொண்டாடி வருகின்றனர். ஆனால், ஜோசப் விஜய் அவர்களோ, 'தான் ஒரு கருணாநிதி' என்பதை ஒவ்வொரு செயலிலும் நிரூபித்து வருகிறார். திமுக வழியில் பயணிக்கும் தவெகவை, திமுகவைப் போல தமிழ்நாட்டு மக்கள் வீழ்த்துவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.