போலீஸ் நிலையத்தில் புகுந்து சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய தி.மு.க. நிர்வாகி கைது

சப்-இன்ஸ்பெக்டர் துரைசிங்கம், தான் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து, பணிபுரியும் போலீஸ் நிலைய சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளின் ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார்.
போலீஸ் நிலையத்தில் புகுந்து சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய தி.மு.க. நிர்வாகி  கைது
Published on

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை அடுத்த கல்லல் அருகே அமைந்துள்ளது விசாலங்கோட்டை சாத்தம்பட்டி பகுதி. இங்குள்ள விருச்சுழி ஆற்றில் மர்ம நபர்கள் சிலர் தொடர்ந்து சட்டவிரோதமாக மணல் அள்ளி வருவதாக சன்னவண்ணம் கிராம நிர்வாக அலுவலர் ஜெகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனையடுத்து அவர் உடனடியாக போலீசாருக்குத் தகவல் அளித்தார். அதன் பேரில் கல்லல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் மணல் கடத்தல் நடந்து வரும் சாத்தம்பட்டி பகுதிக்கு விரைந்து சென்றனர்.போலீசாரைக் கண்டதும் மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து, மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தை இன்ஸ்பெக்டர் ரமேஷ் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்குக் கொண்டு வந்தார்.

வாக்கு வாதம்

இதனைத் தொடர்ந்து இரவு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் துரைசிங்கம் பணியில் இருந்தார். அப்போது, மது போதையில் போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்த கல்லல் ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர், கல்லுப்பட்டியைச் சேர்ந்த அடைக்கலராஜ் (வயது 32) என்பவர், சப்-இன்ஸ்பெக்டர் துரைசிங்கத்திடம் ஆபாசமாக பேசியதுடன், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.அப்போது, "நான் தொடர்ந்து இப்பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகிறேன். இதுவரை எந்த அதிகாரியும் என்னிடம் கேள்வி கேட்டதில்லை" என்று பேசிக்கொண்டிருந்தபோது, அடைக்கலராஜ் திடீரென்று சப்-இன்ஸ்பெக்டர் துரைசிங்கத்தின் கையைப் பிடித்து தாக்கியதாகத் தெரிகிறது.

சிசிடிவி ஆதாரங்கள்

இதில் அவர் லேசான காயம் அடைந்தார். சப்-இன்ஸ்பெக்டர் துரைசிங்கம், தான் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து, பணிபுரியும் போலீஸ் நிலைய சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளின் ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார்.சி.சி.டி.வி. கேமரா ஆதாரங்கள் இருந்ததால், மேலதிகாரிகள் உத்தரவின் பேரில் கல்லல் ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் அடைக்கலராஜ் கைது செய்யப்பட்டார். சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் பேசிய முதல்-அமைச்சர் விஜய், "கட்சி பாகுபாடின்றி, யாருக்கும் அஞ்சாமல் சுதந்திரமாக பணியாற்ற வேண்டும்" என்று கேட்டுக்கொண்ட நிலையில், போலீஸ் நிலையத்திலேயே புகுந்து சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய தி.மு.க. நிர்வாகி அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் தேவகோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com