

சென்னை,
கொரோனா தொற்று பரவல் அபாயம் காரணமாக உலகம் முழுவதும் பொதுக்குழு கூட்டங்கள் அனைத்தும் காணொலி வாயிலாகவே நடத்தப்பட்டு வருகின்றன. அரசியல் கூட்டங்கள், தனியார் நிறுவன கூட்டங்கள் என அதிக எண்ணிக்கையிலான நபர்கள் பங்கு பெறும் கூட்டங்களும் காணொலி மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு காணொலி வாயிலாக நடத்தப்பட்ட போது அதில் 3 ஆயிரத்து 979 பேர் கலந்து கொண்டனர். உலகிலேயே அதிக நபர்கள் காணொலி வாயிலாக கலந்து கொண்ட பொதுக்குழு கூட்டம் இது என்று கூறப்படுகிறது. இதற்கடுத்ததாக உலக அளவில் அரசியல் கட்சியைச் சேர்ந்த அதிகம் பேர் பங்கேற்ற காணொலி கூட்டங்களில் திமுக பொதுக்குழு கூட்டம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
திமுக பொதுக்குழு கூட்டத்தில் 2 ஆயிரத்து 774 பேர் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திமுக பொதுக்குழு கூட்டம் சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்றுள்ளது.