திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை

திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் உடல்நிலை சீராக உள்ளது என்று சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை
Published on

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க பொதுச்செயலாளரும், காட்பாடி சட்டமன்ற தொகுதியின் வேட்பாளருமான துரைமுருகன் காட்பாடியில் தீவிர பிரசாரம் செய்து வந்தார். கடந்த 6-ந்தேதி, காட்பாடியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில், குடும்பத்தினருடன் சென்று ஓட்டு போட்டார். இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கிய சில நாட்களிலே துரைமுருகன் 2 தவணை தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.

அதன்பிறகு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தின் போதே அவருக்கு அடிக்கடி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வாக்குப்பதிவு நடந்த நாளிலில் இருந்து அவர் உடல் சோர்வாக காணப்பட்டார். இந்தநிலையில் ஓட்டுப்பதிவு முடிந்த பிறகு அவர் சென்னைக்கு திரும்பினார்.

கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டில் தங்கினார். அப்போது காய்ச்சல் அதிகமானதால், அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சைபெற்று வரும் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உடல்நிலை சீராக உள்ளது என சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்,

கொரோனா தொற்றுக்கு சிகிச்சைபெற்றுவரும் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உடல்நிலை சீராக உள்ளது. கவலைப்படும்படி அவரது உடல்நிலை இல்லை. மருத்துவக்குழு அவருடைய இதயத்துடிப்பு மற்றும் நாடித்துடிப்பு உள்ளிட்ட அனைத்தையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com