

சென்னை,
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. திருக்குறள் உடன் அவையை சபாநாயகர் அப்பாவு தொடக்கி வைத்தார். 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளனர்.
பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:-
நீட் விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைக்கும் அரசு திமுக அரசு இல்லை. நீட் விலக்கு என்பதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார். கடைசிவரை போராடி அதை பெற்றுத்தருவார். நீட் விஷயத்தில் திமுக அரசு போராடி நல்ல முடிவை பெற்றுத் தரும்
உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியை மறைக்க, தன் ஆதங்கத்தை செய்தியாளர்களிடம் கொட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. நகர்புற உள்ளாட்சி தேர்தல் தோல்வியால் அதிமுக விரக்தி அடைந்துள்ளது. தேர்தல் முறைகேடு பற்றி அதிமுக பேசக்கூடாது.
ஜெயக்குமார் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு மனித உரிமை மீறலில் ஈடுபட்டார். அதனாலே அவர் கைது செய்யப்பட்டார். யார் மீதும் திமுக அரசு பொய்வழக்கு போடவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.