தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக பொய் சொல்லி மக்களை திமுக ஏமாற்றுவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
Published on

சென்னை,

தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற தவறிவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளா. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

"2021 சட்டமன்ற தேர்தலின்போது வெளியிட்ட வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக பொய் சொல்லி மக்களை திமுக ஏமாற்றுகிறது. திமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. ஆட்சிக்கு வந்த பின் அரசு ஊழியர்களுக்கு திமுக பட்டை நாமம் போட்டுள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை திமுக அரசு இன்னும் நிறை வேற்றவில்லை. திமுக ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கான வாக்குறுதியை நிறைவேற்றாதது பற்றி திருச்சியில் பேட்டி அளித்தேன். என் பேட்டிக்கு பதில் சொல்லாமல் பெயரே இல்லாமல் ஒரு அறிக்கையை திமுக வெளியிட்டுள்ளது. உண்மை சுட்டதால் 7 பக்க மொட்டைக் காகித அறிக்கையை ஆட்சியாளர்கள், ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளனர்.

கபட நாடகம் ஆடுவதில் பி.எச்டி பட்டம் பெற்ற ஆட்சியாளர்கள், அதிமுக மீது பாய்கின்றனர். எந்த சூழ்நிலையிலும் நாடகமோ, சூழ்ச்சியோ செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. பிரதான எதிர்க்கட்சி என்பது நிழல் அரசை போன்றது, அது சுட்டிக்காட்டும் குறைகளை நேர்மையான அரசு ஏற்றுக் கொண்டு செயல்பட வேண்டும்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com