திமுக அரசு ஆன்மீக அரசு: தருமபுரம் ஆதீனம்

கோவில் சொத்துக்களை தமிழக அரசு மீட்டு வருகிறது என்று தருமபுரம் ஆதீனம் கூறினார்.
திமுக அரசு ஆன்மீக அரசு: தருமபுரம் ஆதீனம்
Published on

தஞ்சாவூர்,

தஞ்சாவூரில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தஞ்சை பெரிய கோவிலின் கட்டுமானம் குறித்து உலக அளவிலான ஆய்வாளர்கள் கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மிகப்பெரிய சாதனையை ராஜராஜ சோழன் செய்துள்ளார். விட்டுக் கொடுத்தால் கெட்டுப் போவதில்லை என்பதற்கு உதாரணமாக ராஜராஜ சோழன் விளங்கினார். ராஜராஜசோழனின் சதயவிழாவை சிறப்பாக நடத்த உத்தரவு பிறப்பித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

சூரியனார் கோவில் ஆதீனம் திருமணம் தொடர்பாக பேசி முடிவெடுக்க உள்ளோம். தற்போது உள்ள திமுக அரசு ஆன்மீக அரசு. அதை மெய்பிக்கும் வகையில் அனைத்து முகூர்த்த நாட்களிலும் குடமுழுக்குகளை நடத்தி கொண்டிருக்கின்றனர். திருப்பணிகளை விரைந்து செய்து அதிக அளவில் குடமுழுக்கு செய்வதை சாதனையாக கருதுகிறேன். தமிழகத்தில் பெரிய கோவில்கள் மட்டுமின்றி சிறிய கோவில்களுக்கும் குடமுழுக்கு நடத்துவதை இந்த அரசின் சாதனையாக பார்க்கிறேன்.

பெரிய கோவில்களை காட்டிலும் கிராம கோவில்களுக்கு தான் மக்கள் அதிகஅளவில் செல்கின்றனர். பெரியகோவிலை விட சிறிய கோவில்களில் உண்டியல் வருமானம் அதிக அளவில் உள்ளது. கிராம கோவில்களை யாரும் பராமரிக்காமல் சென்று விடக்கூடாது என்பதற்காக, அந்த கோவில்களுக்கு அரசு தனிக்கவனம் செலுத்துகிறது. தமிழக அரசு கோவில் சொத்துக்களை மீட்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com