போதை பொருள் மையமாக ஆவடியை மாற்றியிருக்கும் திமுக - அண்ணாமலை

ஆவடி தொகுதியில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை இன்று பிரசாரம் மேற்கொண்டார்.
போதை பொருள் மையமாக ஆவடியை மாற்றியிருக்கும் திமுக - அண்ணாமலை
Published on

திருவள்ளூர்,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், ஆவடி தொகுதியில் பாஜக வேட்பாளர் ராஜசிம்ம மஹிந்திராவை ஆதரித்து பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று பிரசாரம் மேற்கொண்டார். இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

தீயசக்தி திமுக ஆண்டதும் போதும், மக்கள் மாண்டதும் போதும் என்ற கோபத்தோடு இருக்கும் தமிழக மக்களின் ஒற்றை நம்பிக்கையாக தேர்தல் களத்தில் அயராது மக்களுக்காக குரல் எழுப்பிவரும், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஆவடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நமது பாஜக வெற்றி வேட்பாளர் ராஜசிம்ம மஹிந்திராவை ஆதரித்து நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.

ஆவடியில் தற்போதுள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர் நாசர் செய்த அராஜகங்களை மக்கள் நன்கு அறிவார்கள். சொந்த கட்சிக்காரர்களையே கல்லால் அடித்தது, பால்வளத்துறையை ஊழல் வளர்ந்த துறையாக மாற்றியது, ஆவடியில் எல்லா துறைகளிலும் கமிஷன் வாங்கியது, குற்றவாளிகளோடு இணைந்து புகைப்படம் எடுத்துக்கொள்வது, அறிவிக்கப்படாத ஆவடி மேயராக தனது மகன் ஆசிம்ராஜாவை அமர வைத்தது. இவை தான் கடந்த 5 ஆண்டுகளாக ஆவடி நாசர் செய்துள்ள சாதனைகள்.

ஆவடியில் பொறியியல் கல்லூரி அமைப்போம், பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்துவோம், உள்ளிட்ட பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றியவர் ஆவடி நாசர். கடந்த 5 ஆண்டுகளாக, தனது தொகுதிக்காக ஒரு கேள்வி கூட எழுப்பாமல், உதயநிதி ஸ்டாலினுக்கு புகழ் பாடவே சட்டமன்றத்திற்கு சென்றுள்ள நாசரை இம்முறை ஆவடி மக்கள் புறக்கணிக்கப்போவது உறுதி.

திருவள்ளூர் மாவட்டத்தின் போதை பொருள் மையமாக ஆவடியை மாற்றியிருக்கும் திமுக ஆட்சியை விரட்டியடிக்கவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மக்களாட்சி அமையவும் வரும் 23 ஆம் தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் ஆவடி தொகுதியில் போட்டியிடும் நமது பாஜக வெற்றி வேட்பாளர் ராஜசிம்ம மஹிந்திராவை மகத்தான வெற்றி பெற வைக்க மக்கள் தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணி வெல்லட்டும்! ஆவடி தொகுதி மாற்றம் காணட்டும்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com