பேரூராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு

சித்தையன்கோட்டை பேரூராட்சி கூட்டத்தில் 6 தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். அ.தி.மு.க. கவுன்சிலரும் வெளியேறினார்.
பேரூராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
Published on

பேரூராட்சி கூட்டம்

செம்பட்டி அருகே சித்தையன்கோட்டை பேரூராட்சி உள்ளது. இங்கு மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் உள்பட 15 வார்டுகளில் தி.மு.க. கவுன்சிலர்கள், ஒரு வார்டில் அ.தி.மு.க. கவுன்சிலரும், 2 வார்டுகளில் காங்கிரஸ் கவுன்சிலர்களும் உள்ளனர்.

சித்தையன்கோட்டை பேரூராட்சி கூட்டம் நடந்தது. இதற்கு பேரூராட்சி தலைவர் போதும்பொண்ணு முரளி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஜாகீர்உசேன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் சிவக்குமார் வரவேற்றார். கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:-

லாவண்யா (தி.மு.க.):- ஒவ்வொரு முறையும் கூட்டம் நடைபெறுகிறது. வரவு-செலவு கணக்குகளை காண்பிப்பது இல்லை. பேரூராட்சி பகுதியில் அடிப்படை வசதிகள் முறையாக நடைபெறுவது இல்லை. கவுன்சிலர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுவதில்லை.

கவுன்சிலர்கள் வெளிநடப்பு

அப்போது, அவருக்கு ஆதரவாக தி.மு.க. கவுன்சிலர்கள் முத்துக்குமார், ரத்தினக்குமார் உள்பட 5 கவுன்சிலர்கள், பேசினர். மேலும் எங்கள் வார்டுகளிலும் எந்தப் பணியும் நடைபெறவில்லை. நிதி எங்கே செல்கிறது என்று அவர்களும் கேள்வி கேட்டனர். அ.தி.மு.க. கவுன்சிலர் காவிந்தசாமியும் தனது வார்டில் பணி ஏதும் நடைபெறவில்லை என்றார்.

செயல் அலுவலர்:- நிதி இருந்தால் தான் செய்ய முடியும். நிதி இல்லை என்றால் செய்ய முடியாது.

இதனால் ஆத்திரமடைந்த, தி.மு.க. கவுன்சிலர்கள், செயல் அலுவலரிடமும், துணைத்தலைவரிடமும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கூட்டத்தில் இருந்து 6 தி.மு.க. கவுன்சிலர்கள், அ.தி.மு.க. கவுன்சிலர் கோவிந்தசாமி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே துணைத்தலைவர் வெளியே சென்று கவுன்சிலர்களை சமாதானப்படுத்தினார். இதையடுத்து அவர்கள் கூட்ட அரங்குக்குள் வந்தனர். தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com