

ஈரோடு,
ஈரோடு மாவட்டம் பவானி, அந்தியூர், கோபிசெட்டிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். திறந்த வேனில் நின்று பிரச்சாரம் செய்த அவர், அதிமுக அரசின் செயல்பாடுகள் குறித்து பட்டியலிட்டு பேசினார்.
அதிமுக அரசு சார்பில் கிராம பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் செய்துள்ளோம் என்று குறிப்பிட்டு பேசிய அவர் கல்விக்கான ஊக்கத்தொகை, பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் நிதி உதவி ஆகியவை வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இதனையடுத்து திமுக குறித்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, அது கட்சி அல்ல கார்ப்பரேட் நிறுவனம் என்று விமர்சித்தார். ஊழல் குறித்து பேசுவதற்கு ஸ்டாலினுக்கு தகுதி இல்லை என்று அவர் கூறினார். மேலும் வாரிசு அரசியலுக்கு எதிராக மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.