

சென்னை
தமிழக அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து, தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டத்தில் நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளை முடித்து, தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், தேர்தலில் தனித்து போட்டியிடும் த.வெ.க.வின், வில்லிவாக்கம் தொகுதிக்கான வேட்பாளர் மற்றும் அக்கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜுனா இன்று கூறும்போது, மத்திய மந்திரி எல். முருகன் மூலம் உதயநிதியின் பராசக்தி திரைப்படம் வெளிவர, மத்திய தணிக்கை வாரியம் சான்றிதழ் அளித்தது.
அதன்பின்பு 15 நாட்களில், ஒட்டுமொத்த உதயநிதி பட குழுவினரும் எல். முருகனின் பொங்கல் விழாவில் சென்று பங்கேற்றனர். அவர்கள் பா.ஜ.க. மற்றும் எல். முருகன் ஆகியோரை புகழ்ந்து பேசினர். இவையே நடந்த விசயங்கள். அமித்ஷாவின் மகனுடன் மறைமுக அடிப்படையில், துணை தொழில்களில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் எல்லாவித வணிகம் சார்ந்த செயல்களில், நடவடிக்கைகளில் ஈடுபட்டுதான் வருகின்றனர்.
ஆனால், பெயரளவில் பா.ஜ.க.வை எதிர்ப்பதுபோன்று காட்டி கொள்கின்றனர். உண்மையில் அப்படி இல்லை. ஆனால், மேற்கு வங்காளத்தின் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெளிவாக அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். இந்தியாவில் அவர் ஒருவரே, பா.ஜ.க. கொள்கைகளுக்கு எதிராக இருக்க கூடியவர். தி.மு.க. மற்றும் பிற கட்சிகள் எல்லாம் பெயரளவில் மட்டுமே, பா.ஜ.க.வுக்கு எதிராக உள்ளன என்று பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.
தொகுதி மறுவரையறை தொடர்பாக தி.மு.க. மாநில அளவில் நடத்தி வரும் போராட்டம் பற்றி பதிலளித்த அவர், ஒட்டுமொத்த தென்னிந்தியாவும் இதற்கு எதிராகவே உள்ளன.
இது முற்றிலும் அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லும் என்றார். நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. ஒருபோதும் போராடியது கிடையாது. வக்பு வழக்குகளில் ஒருபோதும் தி.மு.க. போராடியது கிடையாது. தேர்தலுக்கு 5 நாட்களுக்கு முன்னர், அவர்கள் நடித்து கொண்டும், வாக்கு வங்கிக்காக நாடகம் ஆடியபடியும் வருகின்றனர் என கூறினார்.