

சென்னை,
தமிழகம் முழுவதும் பல தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் இருந்து ரூ.100 கோடிக்குமேல் வசூலித்து மோசடி செய்துள்ளதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அரசகுமார் கைது செய்யப்பட்ட நிலையில், குண்டர் சட்டம் அவர் மீது போடப்பட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறையில் அமைச்சர் மற்றும் அதிகாரிகளை தனக்கு தெரியும் என்று கூறி தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ. 100 கோடிக்கு மேல் பணம் வசூலித்து மோசடி செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக தனியார் பள்ளிகளை சேர்ந்த நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தி.மு.க. பிரமுகரான பி.டி. அரசகுமாரை கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டி.டி.சி.பி. மற்றும் சி.எம்.டி.ஏ. அங்கீகாரம் உள்ளிட்ட பிற சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்றுத் தருவதாக கூறி, தமிழகம் முழுவதும் பல தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் இருந்து ரூ.100 கோடிக்குமேல் வசூலித்து மோசடி செய்துள்ளதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அரசகுமார் மீது இந்த நடடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் பி.டி.அரசகுமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பெயரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த வழக்கு தொடர்பாக போலீசார் கூறும்போது தி.மு.க.வில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேசுக்கு நெருக்கமாக இருப்பதாக கூறிய இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அரச குமார் பள்ளி நிர்வாகிகளிடம் பணம் வசூலித்துள்ளார்.
இந்த மோசடியில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது பற்றி தீவிரமாக விசாரண நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தனர்.
இது தொடர்பாக 47 பள்ளிகளின் நிர்வாகிகள் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் பி.டி. அரசகுமார் உடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆகியோருக்கும் இந்த மோசடியில் தொடர்பு உள்ளதா என்பது பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இதன் முடிவில் ரூ.100 கோடி மோசடி வழக்கில் மேலும் பல கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.