

சென்னை,
கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐ நெருக்கி வருகிறது. இதுதொடர்பான விசாரணைக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த 9-ந் தேதி சிபிஐ அதிகாரிகள் அழைத்தனர். ஆனால் அன்றைய தினம் அவர் ஆஜராகவில்லை. இதனால் நேற்று வரவழைக்கப்பட்டார்.
நேற்று காலை 10:30 மணியளவில் சிபிஐ தலைமை அலுவலகம் வந்த செந்தில் பாலாஜியிடம் 11 மணிக்கு விசாரணை தொடங்கப்பட்டது. அவரிடம் சரமாரியாக கேள்விகள் எழுப்பப்பட்டு உள்ளன. மாலை 5 மணிக்கு அவரிடம் அதிகாரிகள் விசாரணையை முடித்தனர். 6 மணி நேரம் விசாரணை நடந்த நிலையில் மாலை 5.20 மணியளவில் அவர் வெளியே வந்தார்.
இந்த நிலையில் சிபிஐ விசாரணை நிறைவடைந்து சென்னை திரும்பிய செந்தில் பாலாஜியிடம், விசாரணை தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது:-
செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் நடைபெற்ற துயர சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகள் சில கேள்விகளை முன் வைத்தனர். அந்த கேள்விகளுக்கு முறையான பதிலை வழங்கியிருக்கிறேன். குறிப்பாக சாட்சிகள் என்ற அடிப்படையில், அன்று நடைபெற்ற சில நிகழ்வுகள் குறித்து என்னிடம் கேள்விகளை முன் வைத்தனர். அந்த கேள்விகளுக்கு என்ன பதில் கூறினேன் என்பதை பொதுவெளியில் சொன்னால் சரியாக இருக்கிறது.
முறையான கேள்விகளுக்கு முறையான பதிலை வழங்கியிருக்கிறேன். சம்மனில் 10.30 மணியளவில் வர சொல்லி இருந்தனர். 10.15 மணிக்கு சென்று விட்டேன். 5 மணிக்கு விசாரணை நிறைவு பெற்றது. கேள்விகள் எண்ணிக்கை எத்தனை என்பது தெரியவில்லை. சிபிஐ அதிகாரிகளுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்திருக்கலாம். அதன் அடிப்படையில் அவர்கள் என்னை அழைத்திருக்கலாம். அங்கு களத்தில் இருந்து பணியாற்றிதன் அடிப்படையில், அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு முறையான பதில்களை வழங்கியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.