

சென்னை:
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. ஆகியோர் இன்று கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் சந்தித்து பேசினர்.
அப்போது, அ.தி.மு.க. ஆட்சியில் முதல்அமைச்சர் மற்றும் சில அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறி 97 பக்கம் அடங்கிய பட்டியலை கவர்னரிடம் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
பினாமிகள் பெயரில் சொத்துகள்
புகார் பட்டியலில் கூறப்பட்டுள்ள முக்கிய குற்றச்சாட்டுகள் வருமாறு:
* முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது நெருங்கிய உறவினர்களுக்கு ரூ.6,133.57 கோடி மதிப்பிலான 6 நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களை கொடுத்துள்ளார். கொரோனா பேரிடர் காலத்தில் மத்திய அரசு கூடுதலாக வழங்கிய இலவச அரிசியை வெளி மார்க்கெட்டில் விற்று முறைகேடாக பணம் சம்பாதித்து அரசுக்கு ரூ.450 கோடி இழப்பு ஏற்படுத்தி உள்ளார். முதற்கட்டமாக ரூ.200.21 கோடி வருமானத்திற்கு அதிகமாக தனது உறவினர்கள் மற்றும் பினாமிகள் பெயரில் 19 சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்.
* துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காக்னிஸன்ட் கம்பெனி கட்டுமான அனுமதியில் ஊழல் செய்துள்ளார். மேலும், வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்துள்ளார்.
நிலக்கரி ஊழல்
* உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 9 பினாமி கம்பெனிகளை வைத்து அதிக விலைக்கு கிராம ஊராட்சி மன்றங்களுக்கு எல்.இ.டி. விளக்கு கொள்முதல் செய்து ரூ.875 கோடி ஊழல் செய்துள்ளார்.
* மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி நிலக்கரி இறக்குமதி, தரமற்ற நிலக்கரி வாங்கியது, போலி மின்சாரக் கணக்கில் ஊழல் செய்தது உள்ளிட்ட ரூ.950.26 கோடிக்கு ஊழல் புரிந்துள்ளார்.
* உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், கொரோனா பேரிடர் காலத்தில் மத்திய அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிய இலவச அரிசி மற்றும் வாங்கிய அரிசியை வெளி மார்க்கெட்டில் விற்று முறைகேடாக பணம் சம்பாதித்துள்ளார்.
வருமான வரித்துறையில் சிக்கிய கவர்கள்
* சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அரசு அதிகாரிகள் மாறுதல்கள் மற்றும் நியமனங்களுக்காக ரூ.20.75 கோடி லஞ்சம் பெற்று வைத்திருந்த கவர்கள் வருமான வரித்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் கல் குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக கல் வெட்டி எடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி ஊழல் செய்துள்ளார்.
* வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ரூ.1,950 கோடி பாரத் நெட் டெண்டர் ஊழல் செய்துள்ளார்.
* மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் மீனவர்களுக்கு வாக்கி டாக்கி கொள்முதல் செய்ததில் ரூ.30 கோடி ஊழல் செய்துள்ளார்.
இவ்வாறு அந்த புகார் பட்டியலில் கூறப்பட்டு உள்ளது.
இந்த புகார் பட்டியலை வழங்குவதற்காக காலை 10.45 மணிக்கு கவர்னர் மாளிகைக்கு உள்ளே சென்ற மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் காலை 11.10 மணிக்கு வெளியே புறப்பட்டு சென்றனர்.