பொள்ளாச்சி சம்பவத்தில் முக்கியமானவர்களை கைது செய்யக்கோரி கனிமொழி தலைமையில் தி.மு.க. மகளிரணியினர் 10-ந்தேதி ஆர்ப்பாட்டம் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பொள்ளாச்சி சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகளை கைது செய்ய வலியுறுத்தி கனிமொழி எம்.பி. தலைமையில் தி.மு.க. மகளிரணியினர் 10-ந்தேதி பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
பொள்ளாச்சி சம்பவத்தில் முக்கியமானவர்களை கைது செய்யக்கோரி கனிமொழி தலைமையில் தி.மு.க. மகளிரணியினர் 10-ந்தேதி ஆர்ப்பாட்டம் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Published on

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 250-க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் வாழ்க்கையைச்சீரழித்த காமக் கொடூரர்களைக் காப்பாற்றிய ஆட்சி.அ.தி.மு.க. ஆட்சி. இதில் சம்பந்தப்பட்டுள்ள அ.தி.மு.க.வின் மாணவரணி நிர்வாகியைப் பாதுகாத்து வந்தது அ.தி.மு.க. ஆட்சி. இப்போதுதான், அதுவும் இந்தப் பாலியல் வன்கொடுமை வழக்கு வெளிச்சத்திற்கு வந்து ஏறக்குறைய இரு ஆண்டுகள் முடியப் போகின்ற நேரத்தில், வேறு வழியின்றி, கைது செய்யப்பட்டுள்ளார். சி.பி.ஐ. அமைப்புதான் அ.தி.மு.க. நிர்வாகியையே கைது செய்துள்ளது!

கைது செய்யப்பட்ட நபர் யாருடன் இருந்தார்? எந்த அமைச்சருடன் இருந்தார்? அப்பகுதியில் உள்ள எந்த முன்னணி அ.தி.மு.க. பிரமுகருடன் இருந்தார் என்பது பற்றிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மீண்டும் வெளிவரத் தொடங்கியுள்ளன.

எனவே, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களையும் தாண்டி - அ.தி.மு.க.வின் முக்கியப் புள்ளிகள் உள்ளார்கள் என்பது தெள்ளத் தெளிவாகிறது. இரு ஆண்டுகளாகக் கட்சியில் பாதுகாப்புடன் வைத்திருந்த அருளானந்தம் என்ற மாணவரணிச் செயலாளரை இப்போது நீக்கியிருந்தாலும் - இந்தக் கொடுங்குற்றத்தில் பங்குள்ள பல முக்கியப் புள்ளிகள் இன்னும் அ.தி.மு.க.வில் மறைந்து இருக்கிறார்கள்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட திருநாவுக்கரசு, முக்கியப்புள்ளிகள் இதில் இருக்கிறார்கள். அந்த முக்கியப் புள்ளிகளைத் தப்ப விட நாங்கள் பலிகடா ஆக்கப்படுகிறோம் என்று வெளியிட்ட வாக்குமூலம் அடங்கிய வீடியோ காட்சிகள் இன்னும் சமூக வலைதளங்களில் அப்படியேதான் இருக்கின்றன. அந்த வீடியோவை வெளியிட்ட 48 மணி நேரத்தில் திருநாவுக்கரசை அப்போது கைது செய்ததும் அ.தி.மு.க. ஆட்சியே!

இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கீழ்மட்ட அ.தி.மு.க. நிர்வாகியுடன் பெண்ணினத்தைச் சீர்குலைத்த இந்த வழக்கை முடித்து வைத்து விடாமல் - இக்குற்றத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வின் முக்கியப் புள்ளிகளையும் - மேலும் யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் அ.தி.மு.க.வின் முன்னணிப் புள்ளிகளையும் உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, தி.மு.க. மகளிரணி மாநிலச் செயலாளர் கனிமொழி எம்.பி., தலைமையில் 10-ந்தேதி காலை 10 மணிக்கு பொள்ளாச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

பாலியல் வன்கொடுமைக்கு காரணமான அ.தி.மு.க.வின் முக்கியப் புள்ளிகள் கைது செய்யப்பட்டு - சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்படும் வரை தி.மு.க.வின் நியாயம் கேட்கும் போராட்டம் ஓயாது - தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com