

சென்னை,
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளபதிவில் தெரிவித்திருப்பதாவது;-
கரூர் வெண்ணைமலையில், இனாம் நில உரிமை மீட்பு பொதுக்கூட்டத்திற்காக, துண்டு பிரசுரம் வழங்கிய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மீது, திமுக குண்டர்கள் அராஜகத் தாக்குதல் நடத்தியிருப்பதை, வன்மையாகக் கண்டிக்கிறேன்.
திமுக வார்டு செயலாளர் தலைமையில் வந்த கும்பல், விவசாய பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த பெண்களை தகாத வார்த்தைகளில் பேசி, கற்களால் தாக்கியிருக்கிறார்கள். இந்த தாக்குதலில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
கருத்து சொல்ல கூட அனுமதிக்காத திமுகவின் மாபியா அரசியல், ஜனநாயகத்திற்கு நேரடியான அச்சுறுத்தல். இந்த வன்முறை, திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு எந்த நிலையில் உள்ளது என்பதற்கு சாட்சி.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட திமுக குண்டர்களை உடனடியாக கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மக்கள் இதற்கு தக்க பதிலை, தேர்தலில் வழங்குவார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.