என்ன முடிவெடுத்தாலும் திமுக எம்.எல்.ஏக்கள் கட்டுப்பட வேண்டும்: மு.க ஸ்டாலின் உத்தரவு

கட்சியின் நலன் கருதி சில முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
என்ன முடிவெடுத்தாலும் திமுக எம்.எல்.ஏக்கள் கட்டுப்பட வேண்டும்: மு.க ஸ்டாலின் உத்தரவு
Published on

சென்னை,

சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், தனிப்பெரும் கட்சியாக வென்ற தவெக ஆட்சி அமைக்க முயன்று வருகிறது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் விஜய் நேற்றும் இன்றும் ஆளுநரைச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். மேலும், ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கக் கோரி கடிதமும் அளித்தார்.

எனினும், பெரும்பான்மை பலம் இருப்பதை உறுதிப்படுத்துமாறு ஆளுநர் விஜய்யிடம் தெரிவித்துள்ளார். இந்தச் சூழலில்தான், அதிமுக - திமுக கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சு நடந்ததாக தகவல்கள் நேற்று இரவு பரவ ஆரம்பித்தது. அதிமுக ஆட்சியமைக்க உள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆவார் என்றும், திமுக வெளியில் இருந்து ஆதரவளிக்கும் என்றும் தகவல்கள் வெளியானது.தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவில் இந்த தகவல் பரபரப்பை கிளப்பியது. இதனை திமுக மறுத்தது .ஆனால் அதிமுக கருத்து கூறாமலே இருந்து வருகிறது.

இந்த நிலையில், திமுக எம்.எல்.ஏக்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளார். மு.க ஸ்டாலின் கூறியதாவது: சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்படவே விருப்பம். ஆனால் கட்சியின் நலன் கருதி சில முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. மூத்த நிர்வாகிகளோடு கலந்து ஆலோசித்து சில முடிவுகளை எடுக்க நேரிடலாம். 10 ஆம் தேதி வரை திமுக எம்.எல்.ஏக்கள் சென்னையிலேயே தங்கியிருக்க வேண்டும். திமுகவின் திட்டங்கள் தொய்வின்றி தொடர்ந்தால்தான் தமிழகத்தின் வளர்ச்சியை தக்க வைக்க முடியும்” என்று கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com