சாதி ஒழிப்பு குறித்து மேடையில் திமுக பேசுவது ஒன்று, செயல்பாட்டில் வேறொன்று - வானதி சீனிவாசன்

சாதிய தீண்டாமை எங்கு நடந்தாலும் தவறுதான் என உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார்.
சாதி ஒழிப்பு குறித்து மேடையில் திமுக பேசுவது ஒன்று, செயல்பாட்டில் வேறொன்று - வானதி சீனிவாசன்
Published on

சென்னை, 

தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடை பெற்று வருகிறது. இதில் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ளார். இவர் சமீபத்திய மேடை பேச்சு ஒன்றில் சாதிய தீண்டாமை எங்கு நடந்தாலும் தவறுதான் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் இது குறித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது எக்ஸ் சமூகவலைதளப்பக்கத்தில், தமிழ்நாட்டில் மட்டுமல்ல சாதிய தீண்டாமை எங்கு நடந்தாலும் தவறுதான் என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருந்தார். மேலும், சாதியை ஒழிக்கத்தான் திமுக போராடி வருவதாகவும் கூறினார். ஆனால் நடப்பதோ வேறு, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியின் நகர மன்ற துணைத்தலைவராக பட்டியலின பெண்ணான ராஜலட்சுமி என்பவர் பணியாற்றி வருகிறார். பட்டியலின சமூகம் என்பதால் சாதிய ரீதியில் மரியாதை வழங்காமல் திண்டிவனம் நகராட்சி தலைவர் செயல்படுவதாக குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

நகராட்சி வளர்ச்சி பணிகளுக்கு கூட அழைத்து சென்று ஆய்வு செய்வதில்லை. தனக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கூட வழங்கவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். திமுக மேடையில் பேசுவது ஒன்று, செயல்பாட்டில் வேறொன்று என்பதை இந்த சம்பவம் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது, என்று அவர் பதிவிட்டுள்ளார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com