முதல்-அமைச்சர் விஜய் பேச்சை கண்டித்து 12-ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்

அரசியல் உலகில் இத்தகைய அருவெறுப்பான உரையை சட்டமன்றம் கண்டிருக்காது என்று திமுக தெரிவித்துள்ளது.
முதல்-அமைச்சர் விஜய் பேச்சை கண்டித்து 12-ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்
Published on

சென்னை,

திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

திராவிட முன்னேற்றக் கழகத்தையும், ஐந்து முறை இந்த நாட்டை ஆண்ட முன்னாள் முதல்-அமைச்சர் தலைவர் கலைஞரையும், இந்தியாவின் புகழை தோகா மாநாட்டில் நிலைநாட்டிய பொருளாதார மேதை முரசொலி மாறனையும், திருமணம் ஆன ஐந்தே மாதத்தில், 23 வயதில் மிசா அவசரநிலைச் சட்டத்தில் கைதாக்கப்பட்டு சிறைச்சாலை சித்திரவதைகளை அனுபவித்து, ஓராண்டு காலம் சிறையில் இருந்த தியாகத்தைச் செய்த தலைவர் மு.க.ஸ்டாலினின் தியாகத்தை கொச்சைப்படுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் விஜய் பேசிய பேச்சு கடுமையான கண்டனத்துக்குரியது. அரசியல் உலகில் இத்தகைய அருவெறுப்பான உரையை சட்டமன்றம் கண்டிருக்காது.

அவரது உரை மூலமாக சட்டமன்றத்தின் மாண்பு, மரபு, வரலாறு இவை அனைத்தும் காற்றில் பறக்கிறது. படங்களாக அந்த அவையில் நிற்கிறவர்கள் தலைகவிழ்ந்து கண்ணீர் வடித்திருப்பார்கள். சில அமைச்சர்கள் சட்டமன்றத்தில் தான் பேசுவது தவறு என்று தெரிந்தே பேசி, 'மீம்ஸ்', 'ரீல்ஸ்'-ஐ வெளியிடுகிறார்கள். நேரலை மூலமாக மக்களை சென்றடைந்த பிறகு அதை ஒப்புக்கு அவைக்குறிப்பில் இருந்து நீக்கிக் கொள்கிறார்கள். இப்படியாக தந்திர மேடையாக சட்டசபையை த.வெ.க. அரசு பயன்படுத்துகிறது.

ஆட்சியின் தோல்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தப்பித்துக் கொள்ள, கொச்சையான பேச்சுகளைப் பேசும் தரமற்ற மனிதராக முதலமைச்சர் விஜய் மாறியிருக்கிறார். இவரது இப்பேச்சைக் கண்டிக்கும் வகையில், தி.முக.. சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் வருகிற 12.09.2026 சனிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் - நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் - மாநில - மாவட்ட நிர்வாகிகள் - ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழகச் செயலாளர்கள் - நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளில் உள்ள நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொண்டு முதலமைச்சரின் ஆணவப் பேச்சைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com