

கரூர்,
தி.மு.க. சார்பில் செப்டம்பர் மாதம் 15-ந்தேதி அண்ணா பிறந்த நாள், செப்டம்பர் 17-ந்தேதி பெரியார் பிறந்தநாள் மற்றும் தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 17-ந்தேதி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான தி.மு.க.வின் முப்பெரும் விழா நாளை (புதன்கிழமை) கரூர் கோடங்கிபட்டியில் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு சுமார் 50 ஏக்கர் நிலத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விழாவில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்ள உள்ளனர்.
விழாவில் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். இதற்காக அவர் நாளை (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு விமானம் மூலம் திருச்சி வருகிறார். பின்னர், அவர் அங்கிருந்து கார் மூலம் கரூர் வருகை தருகிறார்.
பின்னர் கரூர் தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் முதல்-அமைச்சர் ஓய்வெடுக்கிறார். இதனைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு முப்பெரும் விழா நடைபெறும் மேடைக்கு வருகை தர உள்ளார்.
முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி கரூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இந்த விழாவில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.