“தவெக அரசின் நடவடிக்கைகளைப் பார்த்து தி.மு.க. ஒருபோதும் அஞ்சாது” - கனிமொழி

மிரட்டல்களுக்கும் சோதனைகளுக்கும் பணிந்து போகும் இயக்கம் தி.மு.கழகம் அல்ல.
 கனிமொழி
Published on

சென்னை,

தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று (சனிக்கிழமை) காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் தவெக அரசின் மிரட்டல்கள் மற்றும் சோதனைகளுக்கு தி.மு.க. ஒருபோதும் அஞ்சாது என்று அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

காழ்ப்புணர்ச்சியின் உச்சம்

சட்டமன்றத்தில் தி.மு.கழகத்தை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல், தொடர்ந்து அவதூறுகளையும் திசைதிருப்பல் நாடகங்களையும் அரங்கேற்றி வந்த தவெக அரசு, தற்போது காழ்ப்புணர்ச்சியின் உச்சத்திற்கே சென்று, கழக முதன்மைச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான கே.என்.நேரு அவர்களைப் பழிவாங்கப் பார்க்கிறது.

மிரட்டல்களுக்கும் சோதனைகளுக்கும் பணிந்து போகும் இயக்கம் தி.மு.கழகம் அல்ல. எதிர்க்கட்சியின் குரல்வளையை நெரிப்பதற்காக, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் இந்த ஜனநாயக விரோத தவெக அரசின் நடவடிக்கைகளைப் பார்த்து தி.மு.கழகம் ஒருபோதும் அஞ்சாது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com