

சென்னை,
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தே.மு.தி.க.வை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களை வரவேற்று மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
விரைவில் தமிழ்நாட்டில் ஒரு மாற்றத்தை எதிர்நோக்கி நாம் காத்திருக்கிறோம். அதற்கு காரணம், கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அ.தி.மு.க. ஆட்சி இந்த நாட்டையே குட்டிச்சுவராக்கி இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் மறந்துவிட்டு, ஒரு பொய்யான பிரசாரத்தை, ஆட்சியில் இருக்கக்கூடிய அ.தி.மு.க. செய்து கொண்டிருக்கிறது. அவர்கள் கட்சியின் சார்பில் கொடுத்தால் நாம் கேள்வி எழுப்பப்போவதில்லை. கட்சியின் சார்பாக என்ன வேண்டுமானாலும் விளம்பரம் செய்து கொள்ளட்டும். அதைத் தடுக்க விரும்பவில்லை. விமர்சனம் செய்யவும் தயாராக இல்லை. ஆனால் அரசின் செலவில் பக்கம், பக்கமாக விளம்பரங்கள் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். அதற்கென கிட்டத்தட்ட ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஒரு அமைப்பு கருத்துக்கணிப்பை வெளியிட்டு இருக்கிறது. அது என்னவென்றால், 22 மாநிலங்களில் கருத்துக்கணிப்பு எடுத்திருக்கிறார்கள். அதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இருக்கக்கூடிய நம்முடைய தமிழகம் 19-வது மாநிலமாக இடம்பெற்றிருக்கிறது. நீங்கள் என்ன தான் பிரசாரம் செய்தாலும், குட்டிக்கரணம் போட்டாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆட்சிக்கு அல்ல, எதிர்க்கட்சியாக கூட நீங்கள் வர முடியாத சூழல் தான் நிலவுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, எதிர்வரும் தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் நாம் வெற்றி பெறுவோம் என்று கூறியிருந்தேன். இப்போது நாம் மக்கள் கிராமசபைக் கூட்டங்களை உற்சாகத்துடன் நடத்தி, மக்களைத் தொடர்ந்து சந்தித்துக்கொண்டிருக்கிறோம். மக்களின் மனநிலையைப் பார்க்கும்போது, 234-க்கு 234 இடங்களையும் நாம் பெறுவோம் என்ற நம்பிக்கை வருகிறது. இதுதான் இன்றைக்கு இருக்கக்கூடிய நிலை.
கருணாநிதி 5 முறை ஆட்சியில் இருந்தார். அப்போது அவர் என்ன சாதனைகளை எல்லாம் செய்தார் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். அதனையெல்லாம் மனதில் வைத்து நீங்கள் இந்த பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் நமது தாய்மார்கள் நகைகளை அடமானம் வைத்திருக்கிறார்கள். 5 சவரன் வரையிலான அந்த கூட்டுறவு நகை கடனை தள்ளுபடி செய்வோம் என்று நாடாளுமன்ற தேர்தலின்போது அறிவித்தேன். அதனை இப்போதும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
அதுபோல விவசாய கடனை ரத்து செய்வோம் என்று சொல்லியிருந்தேன். அதனை இப்போதும் சொல்கிறேன்.
தி.மு.க. ஆட்சியில் எல்லோருக்கும் வழங்கப்பட்டு கொண்டிருந்த முதியோர் உதவித்தொகை இப்போது சரியாக வழங்கப்படுவதில்லை. கட்சி பாகுபாடு பார்க்கப்படுகிறது என்று மக்கள் சொல்கிறார்கள். தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் கட்சி பாகுபாடின்றி முதியவர்களுக்கு அந்த உதவித்தொகை வழங்கப்படும் என்பதையும் அறிவித்து இருக்கிறேன். இதையெல்லாம் நீங்கள், உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் என அனைவரிடமும் எடுத்து சொல்லி தி.மு.க. தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்று அவர் பேசினார்.