

ஆவடி,
தமிழகத்தில் 21 மாநகராட்சி கள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு நேற்றுமுன்தினம் தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 12 ஆயிரத்து 838 தொகுதிகளுக்கு 57 ஆயிரத்து 778 பேர் தேர்தலில் போட்டியிட்டனர்.
தேர்தலில் ஒட்டுமொத்தமாக 60.70 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. மாநகராட்சிகளில் 52.22 சதவீதம், நகராட்சிகளில் 68.22 சதவீதம், பேரூராட்சிகளில் 74.68 சதவீதம் வாக்குகள் பதிவானது.
ஓட்டுப்பதிவு முடிந்ததும் நேற்று முன்தினம் மாலை மின்னணு எந்திரங்கள் அனைத்தும் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 268 வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அந்த மையங்களில் உள் பகுதியிலும், வெளி பகுதியிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டது.
இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடந்து வருகின்றன. இதில், மதியம் நிலவரப்படி தி.மு.க. 21 மாநகராட்சிகளிலும் அதிக வார்டுகளை வென்று முன்னிலை பெற்று இருந்தது. இதேபோன்று ஆவடி மாநகராட்சியில் அதிக வார்டுகளில் வெற்றி பெற்று தி.மு.க. தன்வசப்படுத்தி உள்ளது.
ஆவடியில் மொத்தம் உள்ள 48 வார்டுகளில் தி.மு.க.-28, அ.தி.மு.க.-2, சுயேட்சை-1 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. முதல் முறையாக மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட ஆவடியை தி.மு.க. தன்வசப்படுத்தி உள்ளது.