இலங்கை கடற்படையினரால் 4 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து, சென்னை திருவான்மியூரில் தி.மு.க.வினர் உண்ணாவிரதம்

தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டத்தை கண்டித்து சென்னை திருவான்மியூரில் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
சென்னை திருவான்மியூரில் எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் தலைமையில் தி.மு.க.வினர் உண்ணாவிரதம்
சென்னை திருவான்மியூரில் எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் தலைமையில் தி.மு.க.வினர் உண்ணாவிரதம்
Published on

4 மீனவர்கள்

தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை மூழ்கடித்து கொலை செய்த சம்பத்தை கண்டித்தும், அவரது குடும்பத்தினருக்கு இலங்கை அரசு தலா ரூ.5 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், திருவான்மியூர் வடக்கு மாட வீதியில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

சைதாப்பேட்டை எம்.எல்.ஏ. வும், மாவட்ட செயலாளருமான மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வாகை சந்திரசேகர், அரவிந்த் ரமேஷ் உட்பட ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள், மீனவ கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரத்தின்போது எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 4 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்திய மக்கள் மனதையும் உலுக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தா, மீனவர் படுகொலையை விபத்து என பொய் கூறுகிறார்.

தமிழக மீனவர்கள் கொலை செய்யப்பட்டிருப்பது குறித்து, பிரதமர் நரேந்திரமோடி இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இந்தநிலையில் தமிழக அரசு 4 மீனவர் படுகொலைக்கு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை, இறந்த மீனவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்யவும் முன்வரவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என கூட மத்திய அரசிடம், தமிழக அரசு கோரிக்கை வைக்கவில்லை.

நடவடிக்கை எடுக்கவேண்டும்

எதற்கு எடுத்தாலும் வாய்ச்சவடால் விடும் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரும் இதுவரை வாய் திறக்கவில்லை. மீனவர் படுகொலையை தடுக்கவும், 4 மீனவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் கிடைக்கவும் மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com