தி.மு.க. முப்பெரும் விழா: மாவட்ட செயலாளர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

கரூரில் தி.மு.க. முப்பெரும் விழா பொதுக்கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.
சென்னை,
தி.மு.க. சார்பில் கட்சி தோற்றுவிக்கப்பட்ட தினம், அண்ணா மற்றும் பெரியார் பிறந்தநாள் ஆகியவை முப்பெரும் விழாவாக வருகிற 17-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் கரூரில் தி.மு.க. முப்பெரும் விழா பொதுக்கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.
இந்தநிலையில் இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்தும், ‘ஓரணியில் தமிழ்நாடு' தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை பணிகள் குறித்தும் கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆலோசனை நடத்துகிறார்.
இதுதொடர்பாக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மதியம் 12 மணியளவில் காணொலி மூலம் நடைபெறும். இதில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டில் இருந்து திரும்பியவுடன் கட்சி பணியிலும் கவனம் செலுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






