4 சிறுவர்களின் டி.என்.ஏ. பரிசோதனைக்காக நாளை மறுநாள் ரத்த மாதிரி சேகரிப்பு

4 சிறுவர்களின் டி.என்.ஏ. பரிசோதனைக்காக நாளை மறுநாள் ரத்த மாதிரி சேகரிக்கப்படுகிறது.
4 சிறுவர்களின் டி.என்.ஏ. பரிசோதனைக்காக நாளை மறுநாள் ரத்த மாதிரி சேகரிப்பு
Published on

புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் அறிவியல் ரீதியான தடயங்களை சேகரிக்க வேங்கைவயல், இறையூர் பகுதியை சேர்ந்தவர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடைபெற்று வருகிறது. இதுவரை 21 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை.

இதற்கிடையில் வேங்கைவயலை சேர்ந்த ஒரு சிறுவன், இறையூர் பகுதியை சேர்ந்த 3 சிறுவர்கள் என 4 சிறுவர்களுக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் புதுக்கோட்டை கோர்ட்டில் அனுமதி பெற்றனர். இதையடுத்து நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 4 சிறுவர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்கப்படுகிறது. மாவட்ட குழந்தைகள் நல குழும அதிகாரி முன்னிலையில் 4 சிறுவர்களிடம் இருந்து ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com