வேங்கைவயல் விவகாரத்தில் 4 சிறார்களிடம் டிஎன்ஏ பரிசோதனை

4 சிறார்களும் டி.என்.ஏ. பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.
வேங்கைவயல் விவகாரத்தில் 4 சிறார்களிடம் டிஎன்ஏ பரிசோதனை
Published on

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை அருகே வேங்கை வயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை 21 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் வேங்கை வயல், இறையூர் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் 4 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த அனுமதி கேட்டு புதுக்கோட்டைத் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்ட கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணையில் சிறார்கள் 4 பேருக்கும் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த அனுமதி அளித்து புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு கோர்ட்டு ஆணை பிறப்பித்தது. அதன்படி 4 சிறார்களுக்கும் வரும் 21-ந்தேதி டி.என்.ஏ. ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு கோர்ட்டின் உத்தரவை அடுத்து தற்போது 4 சிறார்களும் டி.என்.ஏ. பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

குழந்தைகள் நலக்குழுவின் வழிகாட்டுதலோடு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இன்று பரிசோதனை நடக்கிறது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com