

சென்னை,
சென்னை முழுவதும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஆர்.பி உதயகுமார், மழை பற்றி சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், சென்னையை சுற்றியுள்ள எந்த ஏரியும் இதுவரை முழு கொள்ளளவை எட்டவில்லை.
ஏரிகள் நிரம்பியதாக வெளியாகும் வதந்திகளை நம்பவேண்டாம். சமூக வலைதளங்களில் மழைபற்றி பரவும் தகவல்களை நம்ப வேண்டாம். தடையில்லாமல் போக்குவரத்து நடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நோய்த்தொற்று பரவாமல் இருக்க மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.