

சென்னை,
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினரும், கயிறு வாரியத் தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன், பொருளாளர் எஸ்.ஆர். சேகர், விசுவ இந்து பரிஷத் மாநில பிரசார அணி செயலாளர் லட்சுமண நாராயணன் ஆகியோர் நேற்று சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
இது தொடர்பாக சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழக சிறைகளில் நீதிமன்ற தண்டனை பெற்ற சிறைவாசிகளில் 10 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்தவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய அரசு ஆணை வெளியிடப்போவதாக கடந்த 2ந் தேதி முதல்அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்ட சிறைவாசிகளில் தேசத்திற்கு எதிராக வெளிநாட்டு சக்திகளின் ஆதரவோடு செயல்பட்டு, கொலை, குண்டு வெடிப்பு, குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறை தண்டனையில் உள்ள பயங்கரவாதிகள், தேச ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்பட்டு தண்டனை பெற்றுள்ள நக்சல் அமைப்பினர் போன்ற குற்றவாளிகளை அரசு மன்னிப்பு என்ற பெயரில் விடுதலை செய்யக்கூடாது என்பதை தமிழக கவர்னர் உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. கேட்டுக் கொண்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.