

சென்னை,
சென்னையை சேர்ந்த பழனி என்பவர் உயர்நீதிமன்றதில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். aந்த மனுவில், சென்னை மாநகராட்சியில் கட்டிட விதிமீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி தலைமை செயலாளருக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்தீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு 30 நாட்களில் பதிலளிக்க வேண்டும் என்று விதிகள் உள்ளன. ஆனால் அவ்வாறு பதிலளிக்கப்படுவது இல்லை என்று மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
மேலும் மனுதாரரின் புகாருக்கும் இதுவரை பதிலளிக்கப்படவில்லை என்றும் அவ்வாறு பதிலளிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதையடுத்து அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பாமல் நேரடியாக தலைமைச் செயலாளருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
இதையடுத்து நேரடியாக தலைமைச் செயலாளருக்கு மனு அனுப்பியது முறையற்ற செயல் என்று தெரிவித்த நீதிபதிகள், இதை தவிர்க்க வேண்டும் என்று மனுதாரருக்கு அறிவுறுத்தினர். இந்த கோரிக்கை தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையருக்கு மனு அனுப்பும்படியும், அந்த மனுவை ஆறு வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்கும்படியும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டு நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்தனர்.