தூயசக்திக்கு அர்த்தம் தெரியுமா தமிழக முதல்-அமைச்சரே? - எச்.ராஜா கேள்வி

நியாயம், நீதி,உண்மை, நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவை தான் தூயசக்தி என எச்.ராஜா குறிப்பிட்டுள்ளார்.
எச்.ராஜா
Published on

சென்னை,

தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தளபதிவில் தெரிவித்திருப்பதாவது;-

தூயசக்தி எனும் தூய்மையான ஆட்சிக்கு அர்த்தம் தெரியாத தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் கவனத்திற்கு: நியாயம், நீதி,உண்மை, நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவை ஒட்டுமொத்தமாக சேர்ந்தாலே அது தூயசக்தி எனப்படும்.

உங்களது ஒருமாத கால ஆட்சியில் அது எவ்வளவு தூரம் இருந்தது என எடை போடுவோமா?!

நியாயம்:

மதுரையைச் சார்ந்த யூடியூபர் மாரிதாஸ் இன்று எந்த ஒரு விசாரணையும் இன்றி நேரடியாக கைது செய்யப்படுகிறார். காரணம், அவர் தவெக அரசின் செயல்பாடுகளையும் அமைச்சர்களின் திறத்தையும் வெட்டவெளியில் போட்டு கேள்விகளால் துளைத்து இந்த அரசை விமர்சிக்கிறார்! அவரது கேள்விகளில் அவதூறு இருந்தால் அவற்றை எதிர்கொண்டு பதில் சொல்ல வேண்டியதுதானே? அப்படியின்றி பழி வாங்கும் பாசிச மனப்பான்மையோடு அவரை கைது செய்வது அநியாயமில்லையா தூ..சக்தி?!

நீதி:

திருப்பரங்குன்ற தீபம் ஏற்றும் விவகாரத்தில் ‘நாங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் என்ன நடைமுறை இருந்ததோ அதையே தான் பின்பற்றுவோம்’ என முதலில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொல்கிறார். அடுத்தடுத்து பொதுத்துறை மந்திரியும், இந்து அறநிலையத்துறை மந்திரியும் அதனையே வழி மொழிகிறார்கள். சென்ற ஆட்சியினரைப் போலவே நீதிமன்ற தீர்ப்பினை அவமதித்து நாங்களும் இந்து மதவிரோதியாகவே திகழ்வோம் என சொல்வதுதான் மத நல்லிணக்கதோடு இருப்பதற்கான லட்சணமா? இதற்குப் பெயர் அநீதி!

உண்மை:

முதலில் மின்சாரத்துறையிலிருந்து ஒரு ஹார்டு டிஸ்க் காணாமல் போனதாக கண்டுபிடித்து, பத்து நாட்களுக்குப் பிறகு அத்துறையிலிருந்து ஒரு அதிகாரியை விட்டு காவல்துறையில் புகார் கொடுக்க வைத்தீர்கள்…அப்புறம் பெங்களூரில் மின்துறை ஊழியர் ஒருவரை கைது செய்து 4 ஹாட் டிஸ்க்குகளை கைப்பற்றியதாக செய்தி வந்தது, இப்போதோ 18 ஹாட் டிஸ்க்குகளை காணவில்லை என செய்தி வந்திருக்கிறது. வேறு வழியின்றி மிக மெதுவாக இன்றுதான் அந்த வழக்கினை சி.பி.சிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கிறீர்கள். இதுதான் உங்களது உண்மைத்தன்மையா?

நேர்மை:

இதுவும் உங்களிடத்தில் துளியும் இல்லை. அனைத்து மக்களுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என வாக்களித்து, அதிகாரத்திற்கு வந்ததும் 500 யூனிட்டிற்குள் மின்சாரம் செலவு செய்பவர்களுக்குத்தான் 200 இலவசம் என ஒரு இக்கு வைத்து விட்டீர்கள். விவசாயிகளில், பயிர்க்கடன் வைத்திருக்கும் 5 ஏக்கரா விவசாயிகளுக்கு முழுமையாகவும், மற்றவர்களுக்கு 50% தள்ளுபடி எனவும் தேர்தலுக்கு முன்பாக வாக்களித்து விட்டு, பிற்பாடு அதனை வெறும் ரூபாய் 50,000 என ஆக்கி விட்டீர்கள். அதுவும் குறுவிவசாயிகளுக்கு, அவர்கள் கூட்டுறவு வங்கியில் கடன் பெற்றிருந்தால் மட்டுமே இந்த 50,000 ரூபாய். வேறு வங்கிகளில் கடன் வாங்கியிருந்தால் எதுவும் கிடையாது. குறு விவசாயிகளாக இல்லாத மற்ற விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் கடன் தள்ளுபடியும் வெகு குறைவே. இதற்குப் பெயர் நேர்மையல்ல…அதற்கு நேர்மாறு!

வெளிப்படைத்தன்மை:

எங்கும் எதிலும் வெளிப்படைத்தன்மை இருக்கும் என தொண்டையே அறுந்து போகுமளவு உரத்துக் கூவி நீங்களும் அமைச்சர்களும் உறுதி தந்து பதவி ஏற்றீர்கள்! ஆனால், உங்களுக்கு பெரும்பான்மை இல்லையென்றபோது பாஜகவின் ஜனநாயக கூட்டணியில் நின்று வெற்றி பெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரிடம் நீங்கள் எப்படியெல்லாம் மறைமுக பேரம் பேசி உங்கள் பக்கம் இழுத்துள்ளீர்கள் என்பதை இந்த நாடே நன்கு அறியும்! இதுதான் வெளிப்படைத்தன்மைக்கு உதாரணமா? தவிர, எல்லா இடங்களிலும் உங்களது அமைச்சர்களின் கள ஆய்வுகள் எல்லாம் கன ஜோராகத்தான் இருக்கிறது. ஆனால் எடுத்த பதில் நடவடிக்கைகள் எதுவுமே வெட்டவெளிச்சமாக இல்லையே!. இந்த வெளிப்படைத்தன்மையில்லாத பம்மாத்து அரசியலை வெத்துவேட்டு அரசியல் என வேண்டுமானால் அழைக்கலாம்.

ஆக…இந்த ஒரு மாத கால ஆட்சியில், தவெக எங்குமே உண்மையாகவோ, நியாயமாகவோ, நீதி நேர்மையுடனோ, வெளிப்படையாகவோ செயல்பட்டு அது ஒரு தூயசக்தி என மக்களிடம் நிரூபிக்கவே இல்லை. இப்போது மகாகவி பாரதியின் ’நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத்திறனுமின்றி வஞ்சனை செய்வாரடி கிளியே!..வாய்ச்சொல்லில் வீரரடி’ எனும் பாடல் வரிகள்தான் தமிழக பாஜகவின் நினைவுக்கு வருகிறது.

தன்னை தூயசக்தி என அழைத்துக் கொள்ளும் வாய்ச்சொல் வீரர்களும் தீயசக்தி திமுகவின் நீட்சியே..நீட்சியே..நீட்சியே!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com