

சென்னை,
தமிழக மக்களுக்கு சென்னையில் உள்ள சென்டிரல் ரெயில் நிலையத்தை வேண்டுமென்றால் தெரியாமல் இருக்கலாம். ஆனால், எழும்பூர் ரெயில் நிலையத்தை தெரியாமல் இருக்க முடியாது.
காரணம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்தே ரெயில்கள் இயக்கப்படுகின்றன. கோவை, சேலம், ஈரோடு, திருப்பூருக்கு மட்டும் சென்டிரலில் இருந்து சில ரெயில்கள் செல்கின்றன.
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து சென்றாலும், பல பேருக்கு இன்னும் ரெயில் நிலையத்தில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன என்பது தெரியாமலேயே இருக்கிறது. அதைப்பற்றி இங்கே பார்ப்போம்.
ரெயிலில் இருந்து ரெயில் நிலையத்திற்கு வெளியே பயணிகளின் உடைமைகளை எடுத்துச் செல்லும் சுமை தூக்கிகளுக்கு (போர்ட்டர்) 45 கிலோ எடை வரை எடுத்து செல்ல கட்டணம் ரூ.70 ஆகும்.
டிராலி மூலம் 120 கிலோ வரை பொருட்களை இழுத்து செல்ல ரூ.125 கட்டணம் ஆகும். இதேபோல், சக்கர நாற்காலி மற்றும் ஸ்ட்ரெச்சருக்கான கட்டணம் ரூ.65 ஆகும்.
சக்கர நாற்காலி தேவைக்கு பிளாட்பாரம் 4-ல் உள்ள துணை ரெயில்வே ஸ்டேஷன் மாஸ்டரை தொடர்பு கொள்ளவும். ஏதாவது, புகார்கள் அளிக்க வேண்டும் என்றால், 9003061958 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
இதுபோக, பேட்டரி கார் பயணத்திற்கு பயணி ஒருவருக்கு ரூ.20 கட்டணம் ஆகும். மேலும், ரெயில் நிலையத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் உடைமைகளை வைத்துக்கொள்ள ஒரு நாள் வரை கட்டணம் ரூ.20 வசூலிக்கப்படுகிறது. அதற்கு மேற்பட்ட ஒவ்வொரு நாளுக்கும் ரூ.30 கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.