மினி கிளினிக் மூடப்பட்டதால் டாக்டர்களை ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியமர்த்த வேண்டும்

அம்மா மினி கிளினிக்குகளில் பணியாற்றி வந்த டாக்டர்களை ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியமர்த்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மினி கிளினிக் மூடப்பட்டதால் டாக்டர்களை ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியமர்த்த வேண்டும்
Published on

சென்னை,

தமிழ்நாடு முழுவதும் மூடப்பட்ட அம்மா மினி கிளினிக்குகளில் பணியாற்றி, மாற்றுப்பணிகளில் அமர்த்தப்பட்டு இருந்த 1,820 டாக்டர்களும், சுமார் 2 ஆயிரம் பன்னோக்கு மருத்துவ பணியாளர்களும் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அரசு தரப்பில் இருந்து அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதிகளுக்கு மாறாக டாக்டர்களும், பிற பணியாளர்களும் நீக்கப்பட்டிருப்பது மனிதநேயமற்றது.

ஒருவேளை மினி கிளினிக்குகள் தேவையில்லை என்று அரசு கருதினால், அவற்றில் பணியாற்றி வந்த டாக்டர்களையும், மருத்துவ பணியாளர்களையும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியமர்த்தலாம். தமிழ்நாடு முழுவதும் கிராமப்பகுதிகளில் 1,807 ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகரப்பகுதிகளில் 460 ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 267 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

அரசு முன்வர வேண்டும்

டாக்டர் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை மந்திரியாக இருந்த போது கொண்டு வரப்பட்ட தேசிய ஊரக சுகாதார இயக்ககத்தின் மூலம் இவை மேம்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் மகப்பேறு உள்ளிட்ட வசதிகளை வழங்கி வருகின்றன. இவற்றுக்கான டாக்டர்கள் தேவை அதிகரித்து இருப்பதால் நீக்கப்படும் டாக்டர்களை சுகாதார நிலையங்களில் பணியமர்த்தலாம்.

எனவே அம்மா மினி கிளினிக்குகளில் பணியாற்றி வந்த டாக்டர்கள் மற்றும் பன்னோக்கும் மருத்துவ பணியாளர்களை முந்தைய ஆட்சியில் பணியமர்த்தப்பட்டவர்கள் என்ற ஒற்றை கோணத்தில் மட்டும் தமிழக அரசு பார்க்கக்கூடாது. அவர்களின் வாழ்வாதாரம், தமிழக அரசின் தொடக்கநிலை மருத்துவ மையங்களில் சேவையை வலுப்படுத்துவதற்கான டாக்டர்களின் தேவை ஆகியவற்றை கருத்தில்கொண்டு அவர்களை ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியமர்த்த தமிழக அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com