ஜெயலலிதா வீட்டில் கைப்பற்றிய ஆவணங்கள் 3-வது நாளாக ஆய்வு

ஜெயலலிதா வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை 3-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஜெயலலிதா வீட்டில் கைப்பற்றிய ஆவணங்கள் 3-வது நாளாக ஆய்வு
Published on

சென்னை,

சசிகலா, டி.டி.வி.தினகரன் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் வீடு, நிறுவனங்கள் என சென்னை, தஞ்சை, மன்னார்குடி, நாமக்கல், திருச்சி, கோவை மற்றும் கர்நாடக மாநிலம் உள்பட ஒரே சமயத்தில் 187 இடங்களில் 1,600-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 9-ந் தேதி திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனை 13-ந் தேதி வரை தொடர்ச்சியாக 5 நாட்கள் நடைபெற்றது.

இந்த சோதனையில் ரூ.1,480 கோடி வரி ஏய்ப்பு நடந்திருப்பதாகவும், கணக்கில் வராத தங்கம்-வைர நகைகளும், கோடிக்கணக்கில் பணமும், முக்கிய ஆவணங்களும் சிக்கியதாக தெரிகிறது. அவற்றின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பப்பட்டது.

அதன்படி, சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகனும், ஜெயா டி.வி. தலைமை செயல் அதிகாரியுமான விவேக், அவரது சகோதரிகள் கிருஷ்ணபிரியா, ஷகிலா, மைத்துனர்கள் கார்த்திகேயன், ராஜராஜன், டி.டி.வி.தினகரனின் மைத்துனர் டாக்டர் வெங்கடேஷ், சகலை டாக்டர் சிவகுமார், கர்நாடக மாநில அ.தி.மு.க. (அம்மா) செயலாளர் புகழேந்தி, ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன், ஜெயா டி.வி. பொதுமேலாளர் நடராஜன், ஜாஸ் சினிமாஸ் நிறுவன நிர்வாகிகள் உள்பட பலரும் வருமான வரி அலுவலகத்தில் ஆஜரானார்கள். அவர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

கடந்த 17-ந் தேதி விவேக்கின் சகோதரி ஷகிலா, அவரது கணவர் ராஜராஜன் மற்றும் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன் ஆகியோர் 2-வது முறையாக வருமான வரி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் 3 மணி நேரத்துக்கும் மேலாக அதிகாரிகள் துருவி, துருவி விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையின்போது, பூங்குன்றன் அளித்த பதில்களின் அடிப்படையில் அன்றைய தினம் இரவே போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அங்குள்ள பூங்குன்றன் அறை, சசிகலாவின் 2 அறைகளில் சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையில் பென்டிரைவ்கள், லேப்டாப்கள், ஹார்டு-டிஸ்குகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றனர். மேலும் ஜெயலலிதாவுக்கு வந்த கடிதங்களையும் மூட்டைகளாக கட்டி எடுத்துச் சென்றனர்.

அந்த ஆவணங்களை கடந்த 3 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆவணங்களின்படி, சசிகலாவுடன் தொடர்புடைய இன்னும் பலர் வருமான வரித்துறையினரின் வளையத்தில் சிக்குவார்கள் என தெரியவருகிறது. அவர்களுக்கும் விரைவில் சம்மன் அனுப்பப்பட்டு, விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டி.டி.வி.தினகரனின் ஆஸ்தான ஜோதிடர் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சந்திரசேகர் விசாரணைக்கு வருமான வரி அலுவலகத்துக்கு வர இருப்பதாக தகவல் பரவியதால் பத்திரிகையாளர்கள் அங்கு கூடினர். ஆனால், நேற்று மாலை வரை அவர் வருமான வரி அலுவலகத்துக்கு வரவில்லை.

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, இளவரசி ஆகியோரிடம் சிறை நிர்வாகிகளுக்கு முறையான தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com