தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மத்திய அரசுக்கு திமுக ஆதரவா? ஆர்.எஸ்.பாரதி பதில்

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மத்திய அரசுக்கு தி.மு.க. ஆதரவா? என்பது குறித்து ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மத்திய அரசுக்கு திமுக ஆதரவா? ஆர்.எஸ்.பாரதி பதில்
Published on

சென்னை,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 13-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை சில திருத்தங்களுடன் தாக்கல் செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.தற்போது ‘இந்தியா’ கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதால், இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு தி.மு.க. மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளிடம் ஆதரவு கேட்கும் முயற்சியில் பா.ஜனதா ஈடுபட்டுள்ளது என்றும், அவர்கள் இந்த மசோதாவை ஆதரிக்க கூடாது என்றும் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த நிலையில், தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்த பேட்டியில் கூறியதாவது:- 20-ந்தேதி தொடங்கும் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய பாஜக அரசால் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ள முன்மொழியப்பட்ட மசோதாவின் திருத்தப்பட்ட வரைவைப் பார்த்த பிறகுதான் தொகுதி மறுவரையறை பிரச்சினை குறித்து தி.மு.க. முடிவெடுக்கும். நாங்கள் தொகுதி மறுவரையறை மசோதாவை ஏற்கனவே தோற்கடித்துள்ளோம்.

எனவே இந்த மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்படும்போது அதன் உள்ளடக்கத்தை நாங்கள் பரிசீலிப்போம். அது தமிழ்நாடு உள்பட தென்னிந்திய மாநிலங்களின் நலன்களுக்கு எதிராக இருந்தால் தி.மு.க. அதை எதிர்க்கும். நாங்கள் ஏற்கனவே அளித்துள்ள பரிந்துரைகளைச் மத்திய அரசு சேர்த்திருந்தால், தி.மு.க. அதை எதிர்க்க வேண்டிய அவசியமில்லை.மாநில உரிமைகளுக்கான தனது போராட்டத்தில் தி.மு.க. என்றைக்கும் உறுதியாக இருக்கும். தி.மு.க. அளித்துள்ள பரிந்துரைத்த மாற்றங்கள் மசோதாவில் சேர்க்கப்பட்டால், பா.ஜனதா தனது நிலைப்பாட்டை தளர்த்தியுள்ளது என்று அர்த்தம்’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com